அமெரிக்க விசேட தூதுவரை சந்தித்த ஊடகவியலாளர்களுக்கு படைப் புலனாய்வாளர்கள்மிரட்டல்
வடக்கிற்கு நேற்று விஜயம் செய்த போர்க்குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே. ராப்பினுடைய சந்திப்புக்களை அவதானித்த புலனாய்வாளர்கள் அச்சந்திப்புக்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களின் புகைப்படக் கருவிகளைத் தருமாறும் அங்கு எடுக்கப்பட்ட படங்களை அழிக்குமாறும் வற்புறுத்தியுள்ளனர்.
இதேவேளை யாழில் கிறீன் கிறாஸ் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்புக்களை அவதானித்த புலனாய்வாளர்கள் தொடர்பாக அங்கு செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் போர்க்குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ராப்பின் கவனத்திற்குக் கொண்டுவந்த பொழுது அப்புலனாய்வாளர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு தூதுவர் ராப்பும் அறிவுறுத்தியுள்ளமை அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் வியப்பைத் தோற்றுவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த தூதுவர் ஸ்டீபன் ராப் பிற்பகல் யாழ். கிறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இச்சந்திப்புக்களின் பொழுது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை அங்கு படம் எடுக்க வேண்டாம் என புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
அதனை மீறி சந்திப்புக்களைப் படம் எடுத்தவர்களின் புகைப்படக் கருவிகளைத் தருமாறு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இதனை தூதுவர் ஸ்டீபன் ராப்பின் கவனத்திற்கு ஊடகவியலாளர்கள் தெரியப்படுத்திய பொழுது இங்கு இச்சந்திப்புக்களை மேற்கொண்டவர்களிடமும் புலனாய்வாளர்கள் விசாரணை நட த்துவார்கள் எனவும் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தனக்குத் தெரியும் எனவும் சிரித்த முகத்துடன் பதிலளித்ததாக அப்பகுதியில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.