இது என் விருப்பம்! என்னை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை!
கமல் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் டி.டி.எச் ரிலீஸ் முயற்சி கமலுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்குமிடையே மிகப்பெரிய போராட்டத்தையே உருவாக்கியிருந்தது. பொங்கல் ரிலீஸாக திரைக்கு வரவிருந்தது கமலின் விஸ்வரூபம். வெள்ளித்திரையில் மட்டும் வந்திருந்தால் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. சின்னத்திரையிலும், அதுவும் தியேட்டர் ரிலீஸுக்கு ஒருநாள் முன்னரே வரவிருந்தது தான் பெரிய பிரச்சனையாக வெடித்தது.
விஸ்வரூபம் ரிலீஸுக்கு கடைசி மூன்று நாட்கள் வரையிலும் கமல் சமாதானத்திற்கு வராததால், மற்ற படங்களுக்கு அதிக அளவில் தியேட்டர்கள் வழங்கப்பட்டன. ஆனால் கடைசி நேரத்தில் கமல் சமரசம் அடைந்தாலும், மற்ற படங்களுக்கு திரைகளை ஒதுக்கிவிட்டதால் கமலின் விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்கு தியேட்டர் அதிகமாக கிடைக்கவிலையாம்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து இதுபற்றி விவரமாக பேசிய கமல் “ இது என் படம். இதை டி.டி.எச்சில் ரிலீஸ் செய்வது என் விருப்பம். இது பற்றி நானே முடிவெடுக்க வேண்டியவன். என் படத்தை நான் எப்படி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொல்ல யாருக்கும் அறுகதையோ, உரிமையோ கிடையாது. என் நெருங்கிய திரையுலக நண்பர்கள் சிலர் யோசிக்கும்படி கேட்டுக்கொண்டதால் இதுபற்றி யோசித்து வருகிறேன். ஆனால் என் படம் கண்டிப்பாக டி.டி.எச்சிலும் ரிலீஸ் ஆகும்.
திரையரங்கிலும், டி.டி.எச்சிலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்வது பற்றி யோசித்துக் கொண்டு வருகிறேன். விரைவில் ரிலீஸ் தேதியைப் பற்றி அறிவிப்பேன். படங்களை டி.டி.எச்சில் வெளியிடுவது விஞ்ஞான வளர்ச்சி.என் வழி புதிய வழி. இது காலத்தின் கட்டாயம் என்பதால் நடந்தே தீரும்” என்று கூறியுள்ளார். நவம்பர் மாதமே ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் ஜனவரியில் ரிலீஸாகும் என்று அறிவித்ததும் ஆர்ப்பரித்த ரசிகர்களுக்கு ரிலீஸ் மறுபடியும் தள்ளிப் போயிருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மேலும் அடுத்த வாரத்தில் விஸ்வரூபம் ரிலீஸ் செய்யப்பட்டால் ஆதிபகவன், பரதேசி போன்ற படங்களுடன் போட்டி ஏற்படும்