ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்காமல் ஒதுங்கியது அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்..
ஜெனிவா தீர்மானத்தில் இந்தியாவினது நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டிருந்த மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரம், தீர்மானத்தில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விடும் முடிவை இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளே எடுத்திருக்கக் கூடும் என்று தெரிவித்திருந்தார்.
23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்திருந்த நிலையில், இந்தியாவும் ஆதரித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து புதுடெல்லியில் இன்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதாசிங்,
“இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான எந்தவொரு முடிவும், அரசியல் முடிவு இல்லையா?
அரசியல் சமிக்ஞை இல்லாமல் எந்தவொரு அதிகாரியும் முடிவெடுப்பதில்லை.
தீர்மானம் அதிகளவில் தலையீடு செய்வதாக இருந்ததால் தான் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், குறிப்பிட்ட எந்தவொரு நாட்டுக்கும் எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் எதையும் புதுடெல்லி எதிர்த்தே வந்துள்ளது.
கடந்த இரண்டு தடவைகளிலும், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி நல்லிணக்கத்தை எட்ட பணியாற்றும் படி சிறிலங்கா அரசைக் கோரும் தீர்மானங்கள், கொண்டு வரப்பட்டன.
இந்த ஆண்டு தீர்மானம் அதிகளவில் தலையீடு செய்வதாக இருந்தது.
ஒரு அனைத்துலக பொறிமுறையை முன்மொழிவதாக இருந்தது.
அத்தகைய தலையீடு செய்யும் பொறிமுறை தேவையற்றது என்று நாம் கருதினோம்.
வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விடுவது என்ற முடிவை நாம் அலசி ஆராய்ந்த பின்னரே எடுத்தோம்.
தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் விடுவது இது முதல் முறை.
ஏனைய இரண்டு தடவைகளும் இந்தியா ஆதரவாக வாக்களித்திருந்தது.
எம்மால் உதவ முடியும் என்பதை அங்குள்ள தமிழர்களுக்கு காட்ட வேண்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய வீடமைப்புத் திட்டத்தை இந்தியா அங்கு நடைமுறைப்படுத்தி வருகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். |