எதிர்வரும் 5ம் திகதி முடிவடையும் எதிர்வரும் 72 மணி நேரத்தில் பல கட்சி தாவல்கள் இடம்பெறலாம் என பல்வேறு அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் எதிரணிக்கு தாவும் அரசாங்கத்தை சேர்ந்த பலர் இருப்பதாகவும் அவர்களில் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்களும் அடங்குவதாகவும் அந்த தகவல்கள் கூறியுள்ளன.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறும் எதிர்வரும் 5ம் திகதி இவர்கள் எதிரணியில் இணைந்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் ஆளும் கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்களும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தேசிய அளவிலான தேர்தல் பிரசாரங்களை தவிர்த்து வருகின்றனர்.
அதேவேளை எதிர்க்கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர் ஒருவரை ஆளும் கட்சிக்குள் இழுக்க அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.