புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013



              ந்த விஞ்ஞான யுகத்திலும் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவனை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, தனது வன்மத்தைக் கக்கியிருக்கிறது சாதியவெறி. 

நக்கீரன் 
எங்கே?

பெண்சிசுக் கொலைகளுக்கும் சாதியத்துக்கும் பெயர்போன உசிலம்பட்டிப் பகுதியில் இருக்கும் இருக்கும் வடுகப்பட்டியில்.

என்ன நடந்தது? என்று விசாரணையில் இறங்கியபோது ""அதை ஏன் கேட்கறீங்க? தலித் மக்களாகிய எங்களை இங்க இருக்கும் தேவர் சமூகத் துக்காரங்க  அவங்க வீட்டு நாயைவிடக் கேவலமா நடத்துவாங்க. அவங்க தெருவழியா நாங்க செருப்புப் போட்டுக்கிட்டு நடக்க முடியாது. அதை கையிலோ கக்கத்திலோ வச்சிக்கிட்டுத்தான் அவங்க தெருவை நாங்க தாண்டியாகணும். அதேபோல் எங்க ஆளுங்க சைக்கிள், பைக் மாதிரியான வாகனங்கள்ல போனாக்கூட, அவங்க தெருவில் இறங்கி, வண்டியைத் தள்ளிக்கிட்டுத்தான் போகமுடியும். மீறிப்போனா அடிப்பாங்க. ஊரைக் கூட்டி அவங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்வாங்க. இந்தக் கொடுமைகளை ஆண்டாண்டு காலமா நாங்க அனுபவிச்சிக்கிட்டு இருக்கோம். இப்ப சூதுவாது தெரியாத ஒரு சின்னப் பையனை, அவங்கத் தெருவழியா செருப்புப் போட்டுக்கிட்டு ஸ்கூலுக்குப் போனான் என்பதற்காக, அவனை கேவலமாத் திட்டி கொடுமையான தண்டனையைக் கொடுத்திருக்காங்க. கேட்கும்போதே மனசு பதறுது. அந்தப் பையன் இப்போ மனசுடைஞ்சி ஸ்கூலுக்கே போகமாட்டேன்னு அடம்பிடிக்கிறா னாம்''’என்றார்கள் ஊரில் உள்ள தலித் மக்கள். பாதிக் கப்பட்ட மாணவன் அருண்குமாரைத் தேடினோம்.

""விவகாரம் போலீஸ்வரை போயிருப்பதால், அவன் குடும்பமே அவங்க தரப்புக்குப் பயந்து மதுரைப் பக்கம் தலைமறைவா இருக்கு'' என்றார்கள்.

நீண்ட தேடலுக்குப் பின் அருண்குமா ரின் அம்மா நாகம்மாளை சந்தித்தோம். நடந்ததை மிகுந்த சங்கடத்தோடு நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார்... ""அவங்கத் தெரு வழியாத்தான் ஸ்கூலுக்குப் போயாகணும். போன எட்டாந் தேதி, ஸ்கூலில் ரிசல்ட் பார்க்கப் போற பதட்டத்தில், செருப்பைக் கழட்டாம அவங்கத் தெருவழியாப் போயிருக்கான். இதைப்பார்த்த நிலமாலைங் கிறவர், "ஏண்டா நாயே, தலித்துகள் இந்தத் தெருவழியா செருப்பு போட்டுக்கிட்டு போகக் கூடாதுன்னு உனக்குத் தெரியாதா?  கீழ்சாதியில் பொறந்த உனக்கெல்லாம் செருப்பு ஒரு கேடா?'ன்னு சொன்னதோட, எங்க சாதியச் சொல்லி கேவலமாத் திட்டிட்டு, "உன் செருப்பைத் உன் தலையில் தூக்கி வச்சிக்கிட்டு ஸ்கூல்வரைக்கும் போடா. இதுதான் உனக்குத் தண்ட னை'ன்னு சொல்லி மிரட்டியிருக்கார். எங்க பையனும் அவருக்கு பயந்து, தன் செருப்பைத் தூக்கி தலையில் வச்சிக்கிட்டு அவமானத்தோட ஸ்கூலுக்குப் போயிருக் கான். அதைப் பார்த்த அங்க இருந்த மாணவர்கள் கேலி பண்ணிச் சிரிச் சிருக்காங்க. இதில் எங்க பையன் அவமான மாகி, மனம் குன்றிப்போயிட்டான். இதை எங்க ஆளுங்கக்கிட்ட சொல்லி முறை யிட்டேன். அவங்க, கேள்வி கேட்க பயந் தாங்க. அதுக்கு அப்புறம்தான் சமூக சேவகியும் வக்கீலுமான தெய்வத்தம்மா மூலம் வடுகப்பட்டி போலீஸுக்குப் போனோம். தலித்தா பொறந்தது எங்க தப்பா? காலா காலமா நாங்க அவமானத்தை சுமந்துக்கிட்டுத்தான் வாழ்ந்தாகணுமா?'' என்றார் கண்ணீர் சுரக்கும் விழிகளோடு.

அருகில் இருந்த அருண்குமாரிடம் என்ன நடந்தது? என்றபோது, அவ னிடமிருந்து அழுகை தான் பதிலாக வந்தது.

வழக்கறிஞர் தெய்வத்தம்மாளோ, ""வடுகப்பட்டி எஸ்.ஐ. மாரிமுத்து உள்ளிட்ட போலீஸார் சம்பவம் நடந்தது உண்மைதான்னு தெரிந்தும் சமாதானமாப் போங்கன்னு சொன்னாங்களே தவிர நடவடிக்கை எடுப்பதா இல்லை. அதன்பின்தான் மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா விடமும் எஸ்.பி. பாலகிருஷ்ணனிடமும் புகாரைக் கொடுத்தோம்.  இவங்க நடவடிக்கை எடுக்கச்சொன்ன பிறகுதான் இன்ஸ்பெக்டர் ராமசுப்பு விசாரணை நடத்தி எப்.ஐ.ஆரே. போட்டார். இதையறிந்த நிலமாலை தலைமறைவாயிட்டார். விசாரணையில் இந்த சம்பவத்துக்கு உடந்தையா இருந்தது அவங்க அப்பா பதிவு ராஜாதான் என்பதை தெரிஞ்சிக்கிட்ட போலீஸ், முதல்ல அவரைக் கைது செஞ்சாங்க. பிறகு நிலமாலை யின் செல்போன் டவரை ட்ரேஸ் பண்ணி, உசிலம்பட்டி லாட்ஜில் பதுங்கியிருந்த நிலமாலையையும் மடக்கி யிருக்காங்க. இந்தப் பகுதியில் சாதிய வன்முறை அதிகமாவே இருக்கு. போனவருடம் உசிலம்பட்டியில் டிரைவர் பழனியின் நான்காம் வகுப்பு படிக்கும் மகன், அங்க இருக்கும் பெட்டிக் கடைக்கு செருப்புக் காலோட சாக்லெட் வாங்கப் போயிருக்கான்... அதுக்காக அவனை அடிச்சி, உதைச்சிருக்காங்க. இந்த விவகாரத்தை உசிலம்பட்டி போலீஸ், காம்ப்ரமைஸ் பண்ணி வச்சிடிச்சி. இப்படி நிறைய கொடுமைகள் இன்னும் தொடர்ந்துக் கிட்டுதான் இருக்கு''’என்றார் அழுத்தமாய். 

உசிலம்பட்டி டி.எஸ்.பி. சரவணக்குமாரோ, ""எங்க விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மைன்னு தெரியவந்தது. நடவடிக்கை எடுத்திருக்கோம். மாணவன் அருண்குமார் குடும்பம் தைரியமா ஊருக்குள் வரலாம். அவங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படும்''’என்றார் உறுதியான குரலில்.

இந்த நிலையில் ஆதி திராவிடர் தேசிய ஆணை யத்தினர் வெங்கடேசன் தலைமையில் வடுகப்பட்டிக்கு 11-ந் தேதி வந்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் நம்மிடம் பேசிய வெங்கடேசன், ""விசாரித்தபோது ரொம்பவும் வேதனையாக இருந்தது. சம்பவத்தை முழுதாக விசாரித்து அறிந்தோம். இந்த விவகாரம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது''’என்றார் கறார் குரலில்.

இனியாவது உசிலம்பட்டிப் பகுதியில் தலை விரித்தாடும் சாதியக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

ad

ad