ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை பிசாசு என வர்ணித்து உரையாற்றிய சம்பவம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்திலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தன்னைப் பிசாசு என உரையாற்றினார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நான் சிறுவயதிலிருந்தே யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்பவன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் ஜனாதிபதியாகிய பின்னருமாக 11 தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்றேன்.
உங்களில் எத்தனை பேருக்கு எதிர்க்கட்சியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவைத் தெரியும்? தேர்தலுக்கு முன்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கவில்லை. எனினும் என்னை நன்றாக உங்களுக்குத் தெரியும்.
எனவே தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசை நம்புங்கள்.நான் பிசாசு என்னை நன்றாக நம்புங்கள்.
அண்மையில் நான் ரயிலில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தேன். ஆனால் இன்று காங்கேசன்துறை வரை ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நான் ஒன்றை இத்தருணத்தில் நினைவுபடுத்த வேண்டும். இன்னும் எனது ஊருக்கு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவில்லை.
ஆனால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. வடக்கில் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்றே நான் எண்ணினேன். தெற்கில் ஒரு அபிவிருத்தியும் வடக்கில் வேறொரு அபிவிருத்தியையும் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டேன்.
இங்குள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அங்கஜன் ஆகியோர் என்னுடன் உங்கள் பிரச்சினைகள் குறித்து அடிக்கடி கூறுவார்கள்.
அவர்களை நீங்கள் நம்புங்கள். எனவே உங்கள் பிரச்சினைகளுக்கு பேசி தீர்வு காணப்படும். தெரிவுக்குழுவை நான் அமைத்து இருந்தும் கூட அதற்கு வரமாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் இருக்கையில் என்னால் என்ன செய்ய முடியும் என்றார்.