அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இன்று காலையில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த
ராஜபக்ச, தனது சொந்த ஊரான மெதமுலானவுக்குச் சென்றுள்ளார்.
முன்னதாக அலரி மாளிகையில் இருந்து இன்று காலையிலேயே வெளியேறிய அவர், பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில், தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
அதில் அமைச்சர்கள் அனைவரிடமும், பிரியாவிடை பெற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ச, பின்னர், தனது சொந்த ஊருக்கு வாகன அணியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதேவேளை, அலரி மாளிகையில் இருந்த அவரது பொருட்கள் அனைத்தும் மூட்டைகளாகக் கட்டப்பட்டு அவசர அவசரமாக மெதமுலானவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தோல்வியுற்றாலும் தான் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் இருப்பேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.