புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இருவரும் இரண்டு கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) அபாரதம் செலுத்தியதால் 18 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த வழக்கை வாபஸ் பெறுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 1991 - 92 ; 1992 - 93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இதற்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று கூறி இந்த வழக்கை விரைந்து நடத்தி தீர்ப்பு வழங்க உத்தரவிட்டது.
இவ்வழக்கை எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர குற்றவியல் கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் (பொருளாதாரக் குற்ற வழக்குகள்) நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி விசாரணை நடத்தி வந்தார்.
இதனிடையே கடந்த மாதம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாததற்கான அபராதத் தொகையை செலுத்தத் தயாராக இருப்பதாக வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா, சசிகலா தரப்பில் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை அபராதத்துடன் வரி செலுத்த ஜெயலலிதா, சசிகலாவுக்கு அனுமதி அளித்தது. இதனடிப்படையில் 2 கோடி ரூபாய் அபாரதம் செலுத்தப்பட்டதாக ஜெயலலிதா, சசிகலா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை இன்று நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற போது, ஜெயலலிதாவும் சசிகலாவும் 2 கோடி ரூபாய் அபராதம் செலுத்திவிட்டதால் வழக்கைத் திரும்பப் பெறுவதாக வருமான வரித்துறை வழக்கறிஞர் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீது மாலை 3 மணிக்கு தீர்ப்பளிப்பதாக நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். சுமார் 18 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad