புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

ராஜபக்சே தோல்வி: தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து!




)
தஞ்சாவூர்: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது ஒட்டு மொத்த தமிழர்களின் மகிழ்ச்சி என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ராஜபக்சே தோல்வி அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய வைகோ, இலங்கை சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: "ராஜபக்சேவின் தோல்வி இலங்கை வாழ் தமிழ் மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.

இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே ஆட்சியில் தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளார்கள். தமிழ் மக்களின் நியாயமான எண்ணங்களை பிரதிபலித்து செயல்படுத்தும் ஆட்சியாளர்களாக புதிய ஆட்சியாளர் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தா.பாண்டியன்: தமிழக மக்களுக்கு துரோகம் செய்த ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய அரசு நீதிமன்றம் மூலம் ராஜபக்சே மீது விசாரணை நடத்த வேண்டும். தமிழர்கள் உதவிகள் பெற இந்திய அரசை, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு நிலம், உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டது வரவேற்றத்தக்கது என்றும், இந்திய அரசு அமைத்துக் கொடுத்த அனைத்து வீடுகளையும் தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் ராஜபக்சேவும், இந்திய பிரதமர் மோடியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளரும், தமிழர் தேசிய முன்னணி தலைவருமான பழ.நெடுமாறன்: "இலங்கை தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி மட்டுமே தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது ஆகாது. கடந்த காலத்தில் பதவிகளில் இருந்த சிங்கள தலைவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சிங்கள இனவெறியின் அடிப்படையில் தமிழர்களை ஒடுக்க வேண்டும் என்ற முறையில் ஆட்சி நடத்தினர்.

தமிழர்களை ஒடுக்குவதில் அவர்கள் போட்டி போட்டனர். வெற்றி பெற்று இருக்கிற சிறிசேன இதற்கு விதிவிலக்காக இருப்பார் என்பதை அவரது தேர்தல் கால பேச்சுக்கள் காட்டவில்லை.

இலங்கையில் ராஜபக்சே காலத்தில் நடைபெற்ற போர் குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்த ஆணையத்தை இலங்கைக்குள் அனுமதித்து சுதந்திரமாக விசாரணை நடத்த சிறிசேன அனுமதிக்க வேண்டும்.

தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டையும் அவர் செய்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் அவர் மீது நம்பிக்கை பிறக்கும். இதை அவர் செய்ய வேண்டும் என சர்வதேச அழுத்தம் தொடர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன்: "தமிழர்கள் விவகாரத்தில் துரோகம் செய்தவர்கள் தமிழகத்திலும், இலங்கையிலும் தோல்வி அடைந்துள்ளனர். இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் செயலில் தொடர்ந்து பா.ஜ.க. செயல்படும்" என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:"இலங்கையில் ராஜபக்சே தோல்வியின் மூலம் தமிழர் கூட்டமைப்பின் எண்ணம் வெற்றி பெற்றுள்ளது" என்று கூறியுள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்: "இலங்கை அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிக்கு இலங்கை தமிழர்களின் ஓட்டுக்களும் முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். மகிந்த ராஜபக்சே மீது உடனடியாக போர் குற்ற விசாரணையை துவக்க வேண்டும். தமிழர்கள் மகிந்த ராஜபக்சேவிடம் இருந்துவிடுதலை பெறவும், முழு சுதந்திரம் பெறவும்தான் மாற்றத்தை விரும்பி ஒட்டுமொத்தமாக வாக்களித்துள்ளார்கள் என்பதை மைத்திரிபால சிறிசேன புரிந்து கொள்ள வேண்டும்.  மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் வாழ்க்கையை முன்னேற்ற அவர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் கொடுக்க வேண்டும்.

சிங்களர்கள், தமிழர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும். தற்போது இலங்கை அதிபர் தேர்தல் வெற்றி என்பது இரண்டு சிங்களர்களுக்கு இடையில் ஏற்பட்ட மாற்றமாக மட்டும் இருந்து விடக்கூடாது. மீண்டும் சிங்களர், தமிழர்கள்  என்ற பாகுபாடு இருக்க கூடாது. அங்கு வாழும் தமிழர்களும் இலங்கை மண்ணின் மக்கள் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். இலங்கை அதிபர் தேர்தலில் ஒரு வேலை ராஜபக்சே வெற்றி  பெற்றிருந்தால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து சொன்னதால்தான் வெற்றி பெற்றார் என்று இங்குள்ளவர்கள் கூறியிருப்பார்கள். புதிதாக இலங்கை அதிபராக பொறுப்பேற்கும் மைத்திரிபால சிறிசேன இலங்கை தமிழர்களின் வாழ்கையை முன்னேற்ற வேண்டும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும், உரிமையையும் வழங்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ராஜபக்சேவுக்கு எதிராக, மைத்திரிபாலவுக்கு ஆதரவாக சிங்களர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களும் திரண்டதே ராஜபக்சேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை" என்று கூறியுள்ளார்.

ad

ad