புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2016

தமிழகத்தையே உலுக்கிய பெரும் கில்லாடி பெண் அனிதாவின் கதை இது தான்

 நான் அனிதா பேசுகிறேன்" என்று பலரை ஏமாற்றிய இளம்பெண் அனிதாவும், அவருடைய கணவர் சுரேசும் சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.


யார் இந்த அனிதா?

அருப்புக்கோட்டை அனிதாவுக்கு சொந்த ஊர். அங்கு பி.சிஏ இரண்டாம் ஆண்டு படித்தப்போது மார்க்கெட்டிங் மேலாளராக இருந்த குமாருடன் காதல் மலர்ந்தது. இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடியேறினர். இவர்களது இல்லற வாழ்க்கை இனிமையாக பயணித்தது. இந்த சூழ்நிலையில் அனிதா, சூப்பர் மார்க்கெட் தொடங்கலாம் என்று குமாரிடம் சொல்ல... அதற்கு அவரும் பச்சைக்கொடி காட்டினார். கடனாக 2 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தார் குமார். அதை அருப்புக்கோட்டைக்கு கொண்டு சென்று 6 மாதம் காலம் அங்கேயே தங்கினார். குமாரிடம், சூப்பர் மார்க்கெட் பணிகள் நடந்து வருவதாக அவ்வப்போது போனில் தகவல் சொன்னார்.
6 மாதம் கழித்து அருப்புக்கோட்டைக்கு சென்று குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்கான எந்தப்பணிகளும் நடக்கவில்லை. இதுகுறித்து அனிதாவிடம் அவர் கேட்க இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிறகு சமரசமாகி மீண்டும் சென்னைக்கு வந்தனர். கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டால் அது எந்த நேரத்திலும் உடைந்து விடும் என்பதைப் போல அனிதாவுக்கும், குமாருக்கும் அடிக்கடி தகராறு. இறுதியில் 2010ல் சேலையூர் காவல் நிலையத்தில் குமார் மீது புகார் கொடுத்தார் அனிதா. போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தி சமரசப்படுத்தினர். சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் தகராறு ஏற்பட விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் சமயத்தில் சுரேசுடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர்.

இந்த சூழ்நிலையில் அனிதா, ஆடம்பரமாக வாழ தன்னுடைய கவர்ச்சிக்கரமான பேச்சையே மூலதனமாக்கத் தொடங்கினார். பஸ், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் நின்றுக் கொண்டு இளைஞர்களுக்கு வலைவீசுவார். இந்த வலையில் சிக்குபவர்களிடம் நெருங்கிப் பழகுவார். அப்போது தன்னை எம்என்சி (ஐடி) நிறுவனத்தில் வேலைப்பார்ப்பதாகவே அறிமுகப்படுத்திக் கொள்வார். அனிதாவின் வலையில் சிக்கியவர்களின் விவரங்களை சேகரித்தப்பிறகு நீங்கள் படித்த படிப்புக்கு எங்கள் கம்பெனியில் நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்று அக்கறையாக பேசுவார். அதை நம்பி பயோடேட்டா கொடுத்தால் வேலைக்கான ஆர்டரையும் தயார் செய்து கொடுத்துவிடுவார் அனிதா. அப்போது 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கமிஷனாக பெற்றுக்கொள்வார். அனிதா கொடுத்த ஆர்டரைக் கொண்டு வேலைக்குப் போகும் போது தான் அது போலி என்பது தெரியவரும். இவ்வாறு அனிதாவிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியல் நீள்கின்றன.

இந்த சூழ்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் எம்என்சி கம்பெனிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதைச் சொல்லி பணம் கொடுத்தவர்களை அனிதா ஏமாற்றி வந்தார். அவசரப்படுத்தியவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார். இந்த சமயத்தில் அனிதாவிடம் ஏமாந்த மலையரசன் மற்றும் சில வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்ற போலீஸ் நிலையத்தில் அனிதா மீது புகார் கொடுத்தனர். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அனிதாவை விசாரணைக்காக அழைத்தனர். அப்போது சொகுசு காரில் பந்தாவாக வந்து இறங்கினார் அனிதா. தனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று போலீஸாரிடம் சத்தியம் செய்தார் அனிதா. ஆனால் போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணை கேள்விகளால் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து அனிதாவின் லேப்டாப்பில் மோசடி செய்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அனிதாவுடன் மோசடிக்கு உதவியாக இருந்த அவரது கணவர் சுரேசும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தால் அனிதா குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவலைச் சொல்கிறார்கள்.

அனிதா, ஏராளமான ஆண்களுடன் நெருங்கி போஸ் கொடுத்த புகைப்படங்களை கைப்பற்றி உள்ளோம். அதோடு ஒரு திருமண அழைப்பிதழும் உள்ளது. இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் யார் என்று தெரியவில்லை. அனிதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே எத்தனை பேர் அவரிடம் ஏமாந்துள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும். அனிதாவிடம் அறிமுகமாகியவர்களை அண்ணன், லவ்வர் என்ற உறவு முறையிலேயே பழகுவார். பிறகு அவர்களிடம் இருந்து பணம், நகை என எல்லாவற்றையும் ஏமாற்றிவிடுவார். சிலரை ரகசியமாக திருமணமும் செய்து இருப்பதாக தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அனிதாவிடம் ஏமாந்தவர்களின் கதையை கேட்கும் போது சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது.

அனிதாவின் முதல் கணவர் குமாரைக் கூட போலீஸில் சிக்க வைத்து அவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற நீதிமன்றத்தில் முயற்சித்து வந்துள்ளார் அனிதா. அனிதா குறித்த முழு தகவல்களும் அவரை கைது செய்த பிறகே குமாருக்கு தெரியவந்துள்ளது. அனிதா வழக்கில் தோண்ட தோண்ட பல தகவல்கள் வந்துக் கொண்டே இருக்கின்றன" என்றனர்.

அனிதா மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "அனிதா பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அதன் மூலமாக மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருடைய அழகில் மயங்கியவர்கள் லட்சக்கணக்கான பணத்தை அவரிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர். வேலைவாங்கித் தருவதாகவும், திருமணம் செய்தும் பலரை அனிதா ஏமாற்றியுள்ளார். இதற்காக அவரது கையில் எப்போதும் தாலிச் செயின் ஒன்றை வைத்திருந்துள்ளார். அனிதாவுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் அந்த தாலிச் செயினை கொடுத்து இதை என்னுடைய கழுத்தில் கட்டினால் சந்தோஷமாக இருக்கலாம். இல்லையெனில் பல பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். ஏனென்றால் இந்த செயின் கேரளாவில் உள்ள மந்திரவாதிகள் மாந்திரீகம் செய்து கொடுத்தது என்று சொல்லியே பலரை அனிதா ஏமாற்றியுள்ளார்" என்றனர்.

அனிதா போன்றவர்களிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ad

ad