அரசாங்கத்தின் ஜனநாயக அடக்குமுறைக்கு எதிராக மீண்டும் ஜெனீவாவிற்குச் சென்று முறையிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த தகவலை இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதய கம்மன்பில எம்.பி மெகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரை சந்திப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மெகஸின் சிறைக்கு இன்று திங்கட்கிழமை பகல் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பந்துல குணவர்தன எம்.பி,
நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக உள்நாட்டு சர்வதேச சமூகத்தின் முன் முறையிடுவோம். உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெருமவுடன் நானும் இணைந்து அனைத்துல நாடாளுமன்ற சங்கத்திடம் சென்று அரசாங்கத்திற்கு எதிராக முறையிட்டிருந்தோம்.
ஜனநாயக செயற்பாட்டில் ஈடுபட முடியாதபடி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் விதிக்கின்ற இடையூறுகள் பற்றி ஜெனீவாவிற்குச் சென்று முறையிட்ட நாடாளுமன்ற உறுப்பினரே தற்போது சிறைதள்ளப்பட்டிருக்கின்றார்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு எதிராக அடக்குமுறைகளுக்கு எதிராக மீண்டும் ஜெனீவாவிற்குச் சென்று அனைத்துலக நாடாளுமன்ற சங்கத்திடம் முறையிடவுள்ளோம் – என்றார்.