வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மதிமுக போட்டியிடும். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விருதுநகரில் மதிமுக மாநாடு நடைபெறும் என்று விருதுநகர் தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் மேலும் பேசிய வைகோ,
இதே நாளில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் 16-ம் தேதி மக்களவை தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதே தொகுதியில் தோற்க போகிறேன் என்ற கவலையிலும், ஈழத்தில் தமிழர்கள் படுகொலைச் சம்பவமும் நடந்து கண்டு ஆழ்ந்த துயரத்திலும் இருந்தேன். இதையடுத்து தேர்தல் தோல்விச் செய்தி கேட்டு வத்திராயிருப்பைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் உடலில் நெருப்பு வைத்துக் கொண்ட சம்பவங்களும் நடந்தேறியது. இத்தனை இடையூறுகளுக்கு இடையிலும் மதிமுகவை 20 ஆண்டு காலம் தோழர்களால் வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளனர். விருதுநகரில் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த உண்ணாவிரதப் போராட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டத்தில் தொண்டர்கள் அனைவரும் விவசாயிகளின் துயரம் துடைப்பதற்காக ஏராளமான பேர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து, வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட தமிழக அரசு அமைச்சரவை குழுவை அனுப்பியது. பின்னர் மத்திய நிவாரணக் குழுவினரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
அதற்கு முன்னதாக மதுவை ஒழிப்பதற்காக நடைபயண போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இப்போராட்டங்கள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில், வழியெங்கும் லட்சக்கணக்கான பெண்களை சந்தித்துள்ளேன். இந்த இரண்டு ஆண்டுகளில் கட்சி நன்றாக வளர்ந்து பொதுமக்களிடையே நம்பிக்கையை பெற்றுள்ளது. இதுபோன்ற காட்சியை நான் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. ஆனால், விரைவில் மக்களவை தேர்தல் வரப்போகிறது. விருதுநகர் தொகுதியில் மதிமுக போட்டியிடும் என்பதையும் கூறிக் கொள்கிறேன். ஆனால், இப்போது தேர்தல் வளர்ச்சி நிதிக்காகவும், கழக வளர்ச்சி நிதிக்காகவும் சீட்டுக்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கினங்க வந்துள்ளேன். அதனால், மறுபடியும் தொண்டர்களை கஷ்டப்படுத்துவதாக யாரும் நினைக்க வேண்டாம். உங்களுக்காகவே நாள்தோறும் அதிகமாக உழைப்பவன் தான் வைகோ. மேலும், இலங்கை அதிபர் ராஜபட்ச ஈழத் தமிழர்களை கொண்டு குவித்தவன் என்று கூறி இந்தியா முழுவதும் எடுத்துரைக்கும் வகையிலான போராட்டத்தையும் நடத்தியுள்ளேன்.
மேலும், விருதுநகரில் செப்-15ம் தேதி மதிமுக 20-வது ஆண்டு விழா மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு சிறப்பாக நடைபெற இருக்கிறது என்றார்.