''சிறுத்திடல்" வளவெல்லாம் இந்நாளில் சிறுவெள்ளம் பாயும் - வேலிப் புற்றெங்கும் குடைபிடிக்கும் காளான் பிடுங்குதற்கோ போட்டி சிறார் 'சோழனோடை" நிரம்பியே வழிந்து சேரும் கடலுள் நன்றாய் - 'கேரதீவு" தாழங்கடற்கரை ஈஞ்சுபுகுந்து வாடை தம்பாட்டில் சில்லிட்டுச் செல்லும்..,
கற்றாளை கனத்தபுற்கள் ''கரந்தலி" முற்றாத பற்றைக்காடு, இடையே முதிர்ந்த மொட்டைப் பூவரசுகள் வற்றாத நதிபோல வடிவத்தில் ''உப்புக்களி" வாய்க்கால் ஊர்மனை வெள்ளத்தால் நிரம்பி ஓடிடுமழகாய் ''கள்ளியாறு" கரந்தலியில் நுரைதள்ளும் கால்நடைகள் துள்ளிக் குதித்தோடும்..,
''இணுபிட்டியா" குளத்தில் எழுந்து இறால் துள்ளும் ''பெரியகிராய்" அணைவயல்கள் குடலை தள்ளும் ''அடைக்காத்தகுளம்" உடைத்துப் பாயும் ''இறுப்பிட்டி" போகும் இரவுபஸ் வெளிச்சம் எங்கேயோ போய் எதிரொலிக்கும் அறுத்துக் கொண்டோடும் மாடுகளால் அழிவு பயிர்களுக்கென ஏசல்கேட்கும்..,
''மகாவித்தியாலயம் கணேசன் சித்திவிநாயகன் மகளிருக்குச் சுப்பிரமணியன், கமலாம்பிகை" ஓகோவெனப் பதினான்கு பாடசாலைகள் சாகாதகல்வியிங்கு சரித்திர காலந்தொட்டு நாளும் கலை எழுத்து பத்திரிகை பக்தி நன்னெறிமார்க்கம் ''சர்வோதயம்" எனவளரும் நெய்தலும்மருதமும் நிறைந்தழகு சேர்க்கும் நித்திலம்புகழ் பேறுடைப் பொற்பூமி..,
இத்தனையும்கொண்ட எங்கள் பூமியின்று அத்தனையும் இழந்து அலங்கோலமாய்.. இருப்பதனைமாற்றி எழில் பெறவைக்கவென எண்ணம் மிகவே இயக்கம்கொண்டிங்கு வண்ணமாய்ப் பலவிழாவெடுத்துச் சிறப்பிக்கும் சங்கத்தில்தான் உங்கள் உறவுவளரட்டும் சளைக்காது உங்கள் பணிதொடரவே சாற்றுவேன் யானும் புகழ்க்கவிதான்..!