வடக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு சிறிலங்கா தேர்தல் ஆணையாளருக்குத் தடை விதிக்கக் கோரி, வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில், வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஈபிடிபி உறுப்பினரான கந்தசாமி கமலேந்திரன், வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர்.
நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியனைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை, ஈபிடிபியும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமது கட்சிகளின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக அறிவித்து விட்டன.
இந்தநிலையில் தம்மை வடக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க, தேர்தல் ஆணையாளருக்குத் தடைவிதிக்கக் கோரி கந்தசாமி கமலேந்திரன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |