ஐ.நா விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணிக்கக் கூடாது என்றும், இந்த விசாரணைகளுக்கு முகம் கொடுக்காது போனால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஐதேக எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல,
“முன்மொழியப்பட்டுள்ள அனைத்துலக விசாரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்துடன் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று நிரூபிக்க வேண்டும்.
ஐ.நா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவு, குறுகிய பார்வை கொண்டது, அது தேசிய நலன்களுக்கு விரோதமானது.
சிறிலங்கா அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது போனால், அனைத்துலக சமூகம் முன்னோக்கிச் சென்று, ஒருதலைப்பட்சமான விசாரணைகளை நடத்தும்.
அது நாட்டுக்கு எதிரான தீர்ப்பை கொண்டு வரும்.
அதற்குப் பதிலாக, சிறிலங்கா அரசாங்கம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து, அவை ஆதாரமற்றவை என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அறிக்கை, ஐ.நா பாதுகாப்புச் சபை, சிறிலங்காவின் தலைவர்களின் பயணங்களுக்கான தடை, வங்கி கணக்குகளை முடக்குதல் உள்ளிட்ட தடைகளை விதிப்பதற்கு இட்டுச் செல்லக் கூடும்.
அத்தகைய நிலைக்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதா என்று தெரிய வேண்டும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். |