குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 200 பேர் யாழில். கைது
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 200 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்
என யாழ். மாவட்ட பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பகுதியில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்குடன் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் ஒருவரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 21 பேரும், அடித்து காயப்படுத்தியமை தொடர்பில் 41 பேரும், சந்தேகத்தில் 10 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 21 பேரும், வாகன விபத்து தொடர்பில் 8 பேரும், குடித்து விட்டு கலகம் விளைவித்த 7 பேரும், களவு தொடர்பில் 1 பேரும், வீட்டினுள் அத்து மீறி நுழைந்த 4 பேரும், பாதுகாப்பு தொடர்பில் ஒருவரும், நுளம்பு பெருகுமாறு சூழலை வைத்திருந்த ஒருவருமாக மொத்தம் 125 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதேவேளை காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் பாரிய குற்றம் தொடர்பில் 2 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 பேரும், சந்தேகத்தில் 4 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 4 பேரும், ஏனைய குற்றங்களுக்காக 60 பேரும்,சிறு குற்றம் தொடர்பில் ஒருவருமாக மொத்தம் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.