அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மத்தள ராஜபக்ச விமானநிலையம் மற்றும் ராஜபக்ச துறைமுகம் என்பன நட்டத்தில் இயங்குகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாள் ஒன்றுக்கு 50 பேர் மாத்திரமே பயணம் செய்கின்றனர் எனினும் அங்கு 350 பணியாளர்கள் சேவையாற்றுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
மத்தள விமானத்தளம் மற்றும் மஹிந்த ராஜபக்ச துறைமுகம் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக நேற்று அங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு ஒன்று விஜயம் செய்தது.
இதன்போது அந்தக் குழுவின் மீது அரச ஆதரவாளர்களினால் தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் குழுவின் பரீட்சிப்பின்படி மத்தள விமானத்தளமும், துறைமுகமும் சீராக இயங்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் நட்டத்தில் இயங்குகின்றன என்றும் உறுதிப்படுத்தியுள்ளன.
மஹிந்த ராஜபக்ச துறைமுகம் ஏற்கனவே பல கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. எனினும் அங்கு நாள் ஒன்றுக்கு 1000 வாகனங்கள் கப்பல்களில் இருந்து இறக்கப்பட்டு ஏனைய இடங்களுக்கு மாற்றப்படும் நடவடிக்கைகள் மாத்திரமே இடம்பெறுகின்றன.
இதன்போது ஒரு வாகனத்துக்கு 15 டொலர்கள் மாத்திரமே வருமானமாக கிடைக்கின்றன.
இந்தநிலையில் துறைமுகத்தை முழு அளவில் செப்பனிட வேண்டுமாயின் மேலும் 6500 கோடி ரூபா தேவைப்படுகிறது
தற்போதைக்கு பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான இயந்திரங்கள் கூட இந்த துறைமுகத்தில் இல்லை.
இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கே ராஜபக்ச துறைமுகத்தில் பணியாற்றும் உள்ளுர் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக ஐக்கிய தேசிய க்கட்சி தரப்புக்கள் தெரிவித்தன.
அதேநேரம் அந்த துறைமுகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு குறிப்பிட்டுள்ளது.