சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலை சர்வதேச புனித தலமாக்குவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு மும்முரமாக உள்ளது. இது தொடர்பாக முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் கேரள மந்திரிகள் குழு ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து கோரிக்கையும் விடுத்துள்ளனர். இதன் கட்டமாக தென்மாநில மந்திரிகள் மற்றும் அறநிலையத்துறை மந்திரிகள் கலந்து கொண்ட பம்பை சங்கம கலாச்சார மாநாடு பம்பையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன் வரவேற்று பேசினார். கேரள தேவஸ்தான மந்திரி சிவக்குமார், தமிழக அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், காமராஜ் மற்றும் தெலுங்கானா மந்திரிகளும் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.30 லட்சத்திற்கான காசோலையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டது.