12வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்: தியாகு உடல்நிலை பாதிப்பு
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளு வர் கோட்டம் அருகே கடந்த 1–ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் கே.தியாகராஜன் என்ற தியாகு ஈடுபட்டார்.
கடந்த 7–ந்தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கேயும் சிகிச்சை பெற மறுத்து, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.
கடந்த 5 நாட்கள் ஆஸ்பத்திரியில் உண்ணாவிரதம் இருந்த தியாகு, அங்கிருந்து வெளியேறினார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள டாக்டர் வாசுதேவன் சாலையில், மக்கள் கல்வி மாமன்றம் அமைப்பின் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த 12 நாட்களாக தியாகு தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால், அவரது உடல்நலம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை தன்னுடைய போராட்டத்தை கைவிட முடியாது என்று தியாகு கூறினார்.