தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் இரா.சம்பந்தன் தவிர ஏனையோர், ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ளனர்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம், வரும் 26ம் நாள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் சிறிலங்கா தொடர்பான விவாதமும் நடக்க ஏற்பாடாகியுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பெரும்பாலும், 28ம் நாள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா, லண்டனில் இருந்து ஜெனிவா செல்கிறார்.
மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்னரே, ஜெனிவாவில் இருந்து கொழும்பு திரும்பியிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் இன்று கொழும்பில் இருந்து புறப்படவுள்ளனர்.
இவர்கள் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இரு நாடுகளின் தலைநகரங்களுக்கு அவசர பயணம் மேற்கொள்கின்றனர்.
அங்கு பேச்சுக்களை நடத்தி விட்டு, இவர்கள் ஜெனிவா செல்லவுள்ளனர்.
அதேவேளை, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் ஏற்கனவே ஜெனிவாவில் தங்கியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இறுதி நேரத்தில் ஜெனிவா செல்லவே திட்டமிட்டிருந்தார்.
அவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் அவரது பயணம் அவசியமில்லை என்று உணரப்பட்டதால், அந்தப் பயணத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் ஜெனிவாவிலேயே தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |