43ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அவதானிப்பு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் முன்வைக்கவுள்ள நிலையில் இலங்கைக்கு கடந்த வருடம் பயணம் மேற்கொண்ட சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கை தொடர்பான சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையும் வெளியிடப்படவுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் பின்னடை வுகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைகளை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச தூதுக்குழு இம்முறை ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் பல்வேறு தரப்பினர் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கை அரசின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அல்லது மனித உரிமை தொடர்பான அமைச்சர் தலைமையிலான உயர் மட்ட தூதுக்குழுவினர் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கைத் தூதுக்குழுவினர் ஜெனிவாவில் மனித உரிமை ஆணையாளரையும் சந்தித்து பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாடுகளின் தூதுவர்களையும் அரச தரப்பினர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவொன்றும் சட்டத்தரணிகளும் இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளதுடன் பொறுப்புக்கூறல் தொடர்பில் அழுத்தங்களைப் பிரயோகிப்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது