சுயாட்சி மூலமான தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும்
இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், அதேபோன்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளும் இலங்கையினால் நிறைவேற்றப்படவில்லை என்ற கருத்து பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் இந்தியா இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரம் தமிழகம் சென்றிருந்தார். அங்கு ஜெயா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:-
வடமாகாண சபையை நாம் கைப்பற்றி விட்டோம் என்பதனால் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன என்று இந்தியா அர்த்தம் கொள்ளக்கூடாது.
நாட்டுக்கு எவ்வித பிளவும் ஏற்படாமல் ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் ரீதியான அபிலாசைகளை நாம் அடைந்து கொள்ள போதிய சுயாட்சி மூலமான அதிகாரங்களை பெற்றுக் கொள்ளவும் பூரணமான அதிகாரம் கொண்ட ஆட்சிப் பகிர்வு முறையை எமக்கு பெற்றுத் தரவும் இந்தியா காலதாமதமின்றி உதவ வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாடு அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கின்றது. இந்த மகாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாதென்று பலர் கருத்துக் கூறியிருக்கின்றார்கள்.
முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா உட்பட எல்லோரும் இந்தக் கருத்தைக் கூறி வந்திருக்கின்றார்கள். சில நாடுகள் பகிரங்கமாக இந்த மகாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாகக் கூறிக் கொண்டிருக்கின்றன.
விஷேடமாக கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தனது கருத்தை வெளிப்படையாக கூறிவந்திருக்கின்றார்.
இக் கருத்தை தெரிவிப்பதற்கு அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. பொதுநலவாயத்தில் ஒருநாடு உறுப்பு நாடாக இருந்தால் அவர்கள் சில கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
தங்களுடைய நாட்டில் நடைபெறுகின்ற ஆட்சி முறையில் சில தத்துவங்களை மதித்து நடப்பதுடன் அந்த நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
ஜனநாயகம் உண்மையாக நிலவவேண்டும். நீதிமன்றங்களின் சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும். சட்டம், ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். சட்டம் நீதி, நியாயத்தின் அடிப்படையில் ஆட்சி இடம்பெற வேண்டும்.
இவ்விதமான கோட்பாடுகளின் அடிப்படையில் ஆட்சி நடைபெறாமல் இருக்குமாக இருந்தால் அந்த நாடு இந்த பொதுநலவாய நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படையான தத்துவங்களை மீறி நடப்பதாக கருத இடமுண்டு.
இவ்விதமாக மீறி நடந்ததன் காரணமாக இதற்கு முன்பதாக பல நாடுகள் பொது நலவாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றன. பல நாடுகள் தமது உறுப்புரிமையைப் பொறுத்தவரை இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. சிலநாடுகளில் இது நடைபெறாமலும் இருந்திருக்கலாம்.
ஆனபடியால் இலங்கையைப் பொறுத்தவரை நாட்டுக்குள்ளேயே மாத்திரமல்ல, சர்வதேச ரீதியாகவும் பாரிய குற்றங்கள் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டு பொதுநலவாய கோட்பாடுகள் மதிக்கப்படவில்லை, மீறப்பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில் ஐ. நா. சபையின் மனித உரிமைப் பேரவையில் கூட 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இலங்கையில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டுமென்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் இந்த முடிவை பல நாடுகள் எடுத்துள்ளன என்பதை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவர் சமீபத்தில் விட்ட அறிக்கையில் ஏன் இந்த மகாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென்ற கருத்தை அவர் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார். தனது விளக்கத்தை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
அந்தவகையில் தான் தமிழ் நாட்டிலுள்ள ஏனைய தலைவர்களும் தமது கருத்துக்களை கூறி வருகின்றார்கள்.குறிப்பிடக்கூடிய அளவுக்கு இலங்கையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
யுத்தம் நடைபெற்ற போது இராணுவ தேவையின் அடிப்படையில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட மக்களுக்குச் சொந்தமான காணிகள் அந்த மக்களுக்கு பெரிய அளவில் கொடுக்கப்படவில்லை. விசேடமாக யாழ்ப்பாணத்தில் வலிகாமம் என்ற இடத்திலும் திருகோணமலையில் சம்பூரிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அந்த மக்களுக்கு கொடுக்கப்படவில்லை.
அக்காணிகள் ஒரு காலத்தில் அதி உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அக்காணிகள் கொண்டுவரப்பட்டன.மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
ஆனால்,தற்போது யுத்தம் முடிவடைந்து விட்டமையால் மக்கள் தமது சொந்தக் காணிகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். தங்கள் வாழ்வாதாரத்தை தொடங்க வேண்டும். இதற்கு எவ்விதமான தடையும் இருக்க வேண்டிய தேவையில்லை. அப்படியிருந்தும் அக்காணிகள் மக்களுக்கு மீளளிக்கப்படவில்லை.
அது மாத்திரமல்ல, யுத்தம் முடிந்த பிறகு மேலதிகமான காணிகளை அரசாங்கம் கைப்பற்றியிருக்கின்றது. தமது தேவைக்காக சில இடங்களில் இராணுவத்துக்கு வீடு கட்டுகின்றார்கள். இராணுவத்தினர் மக்களின் காணிகளில் விவசாயம் செய்கின்றார்கள்.தோட்டம் செய்கின்றார்கள்.இவ்விதமாக பல தொழில்களில் ஈடுபடுகின்றார்கள். வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள்.
இவ்விதமான இராணுவத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வாழ்க்கையில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கத்துக்கு போதிய தகவல்களைக் கொடுத்து பாராளுமன்றத்தில்கூட இது சம்பந்தமாக கூட்டமைப்பினராகிய நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம்.
அவ்வாறு கூறிய போதும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நிவாரணங்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. உரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு நிலைமை முன்னேறவில்லை.
மக்கள் இன்றுவரை இரண்டாந் தர பிரஜைகளாக கணிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக பரம்பரையாக சுயமரியாதையுடன் வாழ்ந்து வந்த பிரதேசங்களில் வாழமுடியாத கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக சுதந்திரமான விசாரணை நடைபெற்று உண்மை அறியப்படும் என்ற வாக்குறுதியை இந்தியாவுக்கு மாத்திரமல்ல சர்வதேச சமூகத்துக்கும் ஐ. நா. சபையினுடைய செயலாளர் நாயகத்துக்கும் கொடுக்கப்பட்டிருந்த போதிலும்கூட இவ்விதமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமற் போயிருக்கின்றார்கள். அவர்கள் விடயமாக உண்மையை அறிவதற்கு கூட இன்னும் முறையான விசாரணை நடைபெறவில்லை.
அவர்கள் குடும்பங்கள், பெற்றோர்கள், மனைவிமார், பிள்ளைகள், இனத்தவர்கள், உறவினர்கள் அலைந்து திரிந்து தேடியும் உண்மை இன்னும் வெளிவரவில்லை. உண்மையை தெரிவிக்க எவ்விதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
ஆகையால் யுத்தம் முடிவடைந்தது உண்மைதான். ஆனால், அதற்கு பின்புகூட எமது மக்கள் வாழ்வில் அமைதியும் நிம்மதியும் இன்னமும் ஏற்படவில்லையென்றே கூற வேண்டும்.
இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் அதே போன்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளும் இலங்கையரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லையென்ற கருத்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகக் காணப்படுகிறது.
அதே சமயத்தில் இவ்விதமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கின்ற நிலையில் இந்தியா இது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ் மக்களுடைய இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கக்கூடிய வகையில் எமது பிரதேசங்களில் கலாசார ரீதியான, இன ரீதியான, மொழி ரீதியான அடையாளங்களை மாற்றியமைத்து பெரும்பான்மை இனத்தவரைக் குடியேற்ற பெரும்பான்மை இனத்தின் மதத்தை, கலாசாரத்தை பரப்புவதற்கு முயற்சி செய்து தமிழ் மக்களின் அடையாளங்களை இல்லாமல் செய்து நிரந்தரமான பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் பிரதேசங்களில் இவற்றைப் பார்க்கின்ற போது நடைபெற வேண்டியது நடைபெறாமல் இருப்பது மாத்திரமல்ல, நடைபெறக் கூடாத விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு வசதியீனம் மாத்திரமல்ல, நிரந்தரமாக பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் அங்கே கருமங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதைப் பார்க்கின்ற போது இந்திய அரசின் செயற்பாடு இனி வருங்காலங்களில் முழுமையாக இருக்க வேண்டும். திடமாக இருக்க வேண்டும். இலங்கையரசாங்கத்தை செயற்பட வைக்கக்கூடிய வகையில் இந்திய அரசின் செயற்பாடு அமைய வேண்டும் என்று கூறுவதைத் தவிர நாம் வேறு எதையும் கூற முடியாது.
சுயாட்சி வேண்டும்
மாகாண சபை முறை 1987 ஆம் ஆண்டு செய்து கொண்ட இலங்கை- – இந்திய ஒப்பந்தத்துக்கு அமைவாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு ஆட்சி ஒழுங்கு ஒப்பந்தத்தில் உள்ள முக்கியமானவிடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இலங்கையில் வெவ்வேறு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். மூவின மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அம்மக்கள் தங்கள் தனித்துவத்தையும் கலாசாரத்தையும் பேணி பாதுகாக்கக்கூடிய வகையில் நாட்டில் ஒழுங்கு இருக்க வேண்டும்.
சுயாட்சி நாட்டில் இருக்க வேண்டும்.வட, கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் அப்பிரதேசங்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு (வடக்கு, கிழக்கு) அதிகார அலகு அப்பிரதேசத்தில் உருவாக்கப்பட வேண்டும் என பல விடயங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தன.
ஆனால், 13வது திருத்தம் இலங்கையரசால் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை முழுமையாக உள்வாங்கக்கூடிய வகையில் அந்தத் திருத்தம் அமையவில்லை.
இருந்த போதிலும்கூட தற்பொழுது வட மாகாண சபை தேர்தல் நீண்ட காலத்துக்குப் பிறகு நடைபெற்ற போது அதில் கூட்டமைப்பு போட்டியிட்டது.
அரசாங்கம் மாகாண சபையை தங்கள் சார்பாக உட்படுத்தி தமிழ் மக்களுக்கு வர வேண்டிய உரிமைகளை அரசு மறுக்க இடமளிக்காமல் போட்டியிட்டு நாங்கள் கைப்பற்றி பெற வேண்டியதைத் தொடர்ந்து பெற வேண்டுமென்ற காரணத்துக்காக போட்டியிட்டு பெரும் வெற்றி கண்டிருக்கிறோம்.
எமது முயற்சிகள் தற்பொழுது இரண்டு கோணங்களில் அமையும். ஒன்று இம் மாகாணசபை முறைமையைப் பயன்படுத்தி, அதில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி எமது மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக் கொடுக்கலாம் என்றும் அதைப் பெற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம் என்பதற்காகவும், அதே சமயத்தில் நியாயமான அரசியல் தீர்வை பெறக் கூடிய வகையில் ஒருமித்த நாட்டுக்குள் நாட்டுக்கு எவ்விதமான பிளவும் ஏற்படாமல் எமது அரசியல் ரீதியான, பொருளாதார ரீதியான, சமூக ரீதியான, கலாசார ரீதியான அபிலாஷைகளை போதியளவான சுயாட்சியின் மூலமாக பெற்றுக் கொள்வதற்கு அதிகாரம் கொண்ட ஒரு ஆட்சிப் பகிர்வு முறையை கொண்டு வர பாடுபடுவோம்.
இறைமை பகிரப்பட வேண்டும்
இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இறைமை ஒரு இனத்தைச் சார்ந்த மக்களுக்கு உரித்தாக இருக்க முடியாது. ஒரு நாட்டின் இறைமை அந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அந்த இறைமையை மக்கள் அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில் ஆட்சி ஒழுங்கு அமைய வேண்டும் அந்த அடிப்படையில் ஆட்சி முறையொன்றை ஏற்படுத்துவதற்கு எங்களால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.
ஆனால், இக்கருமத்தை நிறைவேற்றுவதில் இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பாரிய பங்கு இருக்கின்றது.
இலங்கையில் நீதி நியாயம் நிலவி தமிழ் மக்கள் சமத்துவமாக வாழ இந்தியாவும் சர்வதேசமும் உதவி செய்ய வேண்டுமென வலியுறுத்த வேண்டியது எனது கடமையென்று கருதுகிறேன்.
சரித்திர ரீதியான தொடர்பு
சரித்திர ரீதியாக நாங்கள் பார்த்தால் இந்தியாவிலிருந்து தான் சிங்கள மக்களாயினும் சரி, தமிழ் மக்களாயினும் சரி, இல்லை முஸ்லிம் மக்களாயினும் சரி வந்திருக்கிறார்கள்.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் உள்ள தொடர்பு சரித்திர கலாசார, சமய, மொழிரீதியாக இருப்பதுபோல் வேறு எந்த நாட்டுக்கும் இல்லை.
இலங்கை இந்தியாவின் அண்டைய நாடு. ஒரு பிராந்திய வல்லரசு. தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டுமென்ற கருமத்தில் ஈடுபட்டிருக்கிறது. அதைத் தீர்த்து வைப்பதற்கு முயற்சிகள் எடுத்துள்ளது.
அம்முயற்சி தொடர்ந்து கொண்டு செல்லப்பட வேண்டும். ஒரு நியாயமான நீதியான தீர்வை இலங்கை தமிழ் மக்களுக்கு பெற்றுத்தர வேண்டிய தார்மீகப் பொறுப்பொன்று இந்தியாவுக்கு உள்ளது என நாம் கருதுகின்றோம்.
ஒப்பந்தங்கள் நிறைவேறவில்லை
தமிழ் மக்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் கருமங்கள் இலங்கையில் நடைபெறுமாக இருந்தால் எமது பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட வேண்டிய விடயமல்ல. நாங்களே பேசித் தீர்த்து முடிவு கண்டிருப்போம்.
ஆனால், எமது தலைவர்கள் இலங்கையரசுடன் செய்து கொண்ட எந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் கடும் முயற்சியின் காரணமாகத்தான் மாகாண ஒழுங்குமுறை உருவாக்கப்பட்டது.
ஆனால், அதுவும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து நாங்கள் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவோம். அதற்கு மேலாக அதைக் கட்டியெழுப்பி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குவோம். அதன் மூலமாக தமிழ் மக்களுக்கு கணிசமான சுயாட்சி கிடைக்கும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்தது.
அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு மாறாக 13வது ஷரத்தை இல்லாமல் செய்வதற்கும் அதிகாரங்களை குறைப்பதற்கும் மாற்றுவதற்கும் பல முயற்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இது இந்திய அரசாங்கத்துக்கு நன்றாகத் தெரியும்.
நாங்கள் பாரதப் பிரதமரைச் சந்தித்து இவ்விடயங்கள் தொடர்பாக விளக்கியிருக்கிறோம். எமது சந்திப்பிற்கு பிறகு இந்தியாவால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக அவ்வித முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் கைவிடப்படவில்லை.
இன்னுமொரு ஆபத்து இருக்கின்றது. இன்னும் எது நடக்குமென்று கூற முடியாது ஆனால், இவையெல்லாவற்றையும் கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. ஒரு மாகாண சபை அமைக்கப்பட்டதன் நிமித்தம் பிரச்சினை தீர்ந்துவிட்டது என எண்ணக்கூடாது.