கடும் துவேசத்தை கிளப்பி வாக்கு பெறும் நோக்கம் தமிழர்களுக்கு ஒருபோதும் சமஷ்டி ஆட்சி வழங்கப்படாது, நாடு பிளவுபட அனுமதிக்க மாட்டோம்: மஹிந்த இறுமாப்பு
தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சமஷ்டி வழங்கப்படாது என இறுக்கமாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடு பிளவுபடுவதை அனுமதிக்க முடியாது எனவும் கடும்தொனியில் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள சமூகத்திடம் ஒரு கருத்தினை குறிப்பிட்டு ஏமாற்றி தமிழ் மக்களுக்கு சமஷ்டியாட்சியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார் எனவும் இதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.
கலகெதர நகரில் நேற்று (05) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இரண்டு பிரதான அரசியல் கட்சிகளிள் தேர்தல் கொள்கை பிரகடனம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை அனைத்து இன மக்களுக்கம், பொதுவானதாகவும் பொருளாதாரத்தினை முன்னேற்றுவதாகவும் காணப்படுகின்றது. ஆனால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கொள்கை பிரகடனம் ஒருதலைபட்சமானது.
இலங்கை தமிழரசு கட்சி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவர் ஊடகங்களுக்கு சிங்கள மொழியில் ஒரு விதமாகவும், தமிழ் மொழியில் பிறிதொரு விதமாகவும் கருத்துரைத்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் சிங்கள மொழியில் ஒருமித்த நாடு என்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் சமஷ்டி முறைமையினை தோற்றுவிப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு இனத்தினை ஏமாற்றும் செயற்பாடாகும். எனவே நாடு மீண்டும் பிளவுப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று அவர் கூறினார்.