சிங்கம் 2 –விமர்சனம்!
போலீஸ் யூனிஃபார்ம், முறுக்கு மீசை, நறுக்குப் பேச்சு என்று போலீஸ் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்திய தமிழ் ஹீரோக்களில் சத்தியராஜ், சியான் விக்ரமுக்குப் பிறகு சூர்யாவும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறார். முதல்பாகத்தில் கொஞ்சம் அதீதமான வசனத்தையும் நம்பியிருந்த சூர்யா, இரண்டாம் பாகத்தில் கம்பீரமான உடல்மொழியை அதிகம் நம்பி உழைத்திருப்பதற்கு கைமேல் பலன். சூர்யா வரும் காட்சிகள் எல்லாம் நிஜமாகவே அனல் தெரிக்கிறது…! இப்படியொரு ஆஃபீஸர் நிஜமாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விட்டால் தமிழ்நாடு சொர்க்கபுரிதான் போங்கள்!
முதல் பாகத்தில் உதவி கமிஷனர் வேலையில் இருந்து வெளியேறும் துரைசிங்கம் சூர்யாவை, மாநில உள்துறை அமைச்சரான விஜயகுமார், “ நீங்கள் தூத்துக்குடியில் தங்கியிருந்து சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலை கண்காணிங்யுங்கள்!” என்று உத்தரவிடுகிறார். அமைச்சரின் உத்தரவை ஏற்று, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் தேசிய மாணவர் படை அதிகாரியாக மாணவர்களுக்கு பரேட் எடுகிறார். அங்கிருந்தபடியே அந்த ஊரின் பெரிய மனிதர்களில், உப்பள முதலாளியான பாய் ( முகேஷ் ரிஷி), ஷிப்பிங் கம்பெனியின் முதலாளி தங்கராஜ் (ரஹ்மான்) இருவரையும் கண்காணிக்கிறார். அவர்கள் இருவரும் சர்வதேச போதைபொருள் மாபியா மன்னன், டேனியிடமிருந்து பெட்டிப்பெட்டியாக ஹெராயின் போதைப் பொருளை வாங்கி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரீடெயிலில் விற்கிறார்கள். ஆயுதக் கடத்தலைக் கண்காணிக்க வந்த துரைசிங்கத்துக்கு, போதைபொருள் கும்பல் நாட்டையே அழித்துக் கொண்டிருப்பது புதையல் மாதிரி தெரிய வருகிறது! அடியாள் பலம், அரசியல் பலம், இவற்றுக்கு அப்பால் இந்த மூன்று பேர் கொண்ட கும்பலை, துரைசிங்கம் மெல்ல மெல்ல தனது வலைக்குள் கொண்டுவந்து , எப்படி உள்ளே தள்ளுகிறார் என்பதுதான் பரபர விறுவிறு திரைக்கதை.
சும்மா சொல்லக் கூடாது இயக்குனர் ஹரியை! ஒரு மசாலா படத்தில் என்னென்ன ஐயிட்டங்கள் இருக்க வேண்டுமோ அவைகளை கச்சிதமாக சிங்கம் இரண்டில் பேக் செய்திருக்கிறார்.
ஆனால் துரைசிங்கத்தின் காதலியாக முதல் பாகத்தில் வரும் அனுஷ்கா, ‘காவ்யா’ கதாபாத்திரத்தில் அநியாயத்துக்கும் இருட்டுக்கடை அல்வாவாக பளபளக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் ‘சிங்கம் டான்ஸ்’ பாடலிலும் ‘ கண்ணுக்குள்ளே’ பாடலிலும் அனுஷ்காவின் சேட்டைகளை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை கிளாம் டால்!
ஏட்டு ஏழுமலையாக விவேக் ஒகே என்றாலும் ,சந்தாணம் உள்ளே புகுந்ததில் விவேக் காணாமல் போய்விடுகிறார்.
லஜிக்கலாக , ஊழல் மலிந்த இந்தியாவில், ‘ஆஃபேரேஷன் டி’ போன்று, ஒரு சர்வதேச குற்றவாளியை முன்றே நாட்களில் பிடித்து திரும்பும் அதிசயம் ஒரு இந்திய காவல் அதிகாரிக்கு நிகழ வாய்ப்பே இல்லை! என்றாலும் திரையில் லாஜிக்கை நினைத்து சிரிக்கும் முன்பு காட்சிகளை பரபரப்பாக நகர வைத்து கச்சிதமாக ‘பிலிம்’ காட்டிவிடுகிறார் ஹரி!
மொத்ததில் சிங்கம் 2… கச்சிதமான பாய்ச்சல்!