வடமராட்சிப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தி பொய் என்கிறார் இராணுவப் பேச்சாளர்
யாழ்.வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை பகுதி கிணறொன்றிலிருந்து 17 மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
பல்லப்பை பிரதேசத்தில் சுத்திகரிப்பு பணியின் போது 17 மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக இணையத்தளங்களில் வெளியான செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
சர்வதேச இணையத்தளங்கள் ஊடாக இந்நாட்களில் இலங்கை தொடர்பான மிகவும் தவறான புனையப்பட்ட பல கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை இலங்கையின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் செயற்பாடாகும்.
பல்லப்பை என்ற பகுதியில் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இராணுவத்தினருக்கோ பொலிஸாருக்கோ இதுவரை பதிவாகவில்லை. பல்லப்பை பிரதேச மக்களுக்குக் கூட அப்படியொரு சம்பவம் இருப்பது தெரியாது.
இது தொடர்பில் நாமும் எமது அதிகாரிகளை ஸ்தலத்துக்கு அனுப்பி ஆராய்ந்தோம். எனினும் அங்கு அப்படி எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்தார்.
யாழ்.வடமராட்சி, பல்லப்பை பகுதி கிணறொன்றிலிருந்து 17 மனித எச்சங்கள் அங்கு சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களினால் மீட்கப்பட்டதாகவும், இந்நிலையில் அங்கு சுத்திகரிப்பு பணிகளை தொடர வேண்டாம் என இராணுவம் பொதுமக்களுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
தொடர்புடைய செய்தி