மஹிந்த தரப்பின் நிதி விவகாரங்களை முடக்கும் நடவடிக்கையில் ஜக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.இதன் பிரகாரம் மஹிந்தவின் பிரதமர் அலுவலக நிதிக்கையாளுகை செயற்பாடுகளை முடக்குவதற்கான பிரேரணை அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலத்திரனியல் முறையில் இன்று (29) குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றபோது 123 வாக்குளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தை நாளை (30) 10.30 மணிவரையில் சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்திவைத்துள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், தனக்கு எந்தவொருப் பிரச்சினையும் இல்லையென்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
ஜனாதிபதியால், உயர்க்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜேதாச ராஜபக்ஷ, தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில், சபாநாயகரும் ஜனாதிபதியும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்க்க வேண்டுமெனக் கோரினார்.
இதற்கு மேற்கண்டவாறு தெரிவித்த சபாநாயகர், “ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில், எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்குரிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க நான் தயார்” என்றார்.