இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர் ஒருவர் இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டமையை , சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் "கடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதசெயல் " என்று தெரவித்துள்ளதாக சுவிஸ் இன் போ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை குறித்த கடத்தலை உறுதிப்படுத்திய சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் , தூதரகம் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கடத்தப்பட்ட பெண் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
"சுவிட்சர்லாந்து உடனடியாக இந்த சம்பவத்தை இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உடனடி மற்றும் முழுமையான விசாரணையை கோருகிறது" என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பியர்-அலைன் எல்ட்சிங்கர் எழுத்தில் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தூதரும் பெர்னில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார். கடத்தலை புரிந்தவர்கள் என்ன விடயத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் சொல்லவில்லை.