வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களுடன் தவறாக நடக்கமுற்பட்ட அதிபர்!
[Thursday 2019-12-05 09:00]
வவுனியா தாலிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவருடன் தவறாக நடக்கமுற்பட்ட சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையின் அதிபர் கற்பித்தல் நேரங்களில் ஆசிரியர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து அலுவலக பணிகளை செய்யுமாறு காட்டாயப்படுத்தியதுடன் சில நேரங்களில் அவ் ஆசிரியர்களிடம் தவறாகவும் நடக்க முற்பட்டுள்ளார். குறித்த அதிபரின் தொல்லையை பொறுக்கமுடியாத ஆசிரியர்கள் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சம்பவம் தொடர்பில் முறையிட்டபோது வலயக்கல்வி பணிப்பாளர் அதிபர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் குறித்த இரு ஆசிரியர்களை இடமாற்றம் செய்துள்ளார்.
மேலும் குறித்த பாடசாலையின் அதிபர் முன்பு கடமையாற்றிய வவுனியா கந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவருடன் தவறாக நடக்கமுற்பட்டபோது அவ் ஆசிரியரின் கணவரால் நையப்புடைக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பான விசாரணையின் நிமித்தம் குறித்த அதிபர் வலயக்கல்வி பணிமனையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த அதிபருக்கு எதிராக வலயக்கல்வி பணிமனை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் இவ் பிரச்சினையை மூடி மறைப்பதற்கு வலயக் கல்விப் பணிப்பாளரும் குறித்த அதிபரும் கடும்பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர் என பாடசாலை ஆசிரியர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்