சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த ஒருவருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியாலை முள்ளிப் பகுதியைச் சேர்ந்த, 53 வயதுடைய இவர் யாழ்ப்பாணம் நகர் – கொழும்புத்துறை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்துநராவார். தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவருடன் நேரடியான தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு வெளியான நிலையில், மனைவிக்கும், மகனுக்கும் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட மனைவி வீட்டில் இருப்பவர். மகன் முச்சக்கர வண்டிச் சாரதியாவார். அவருடன் தொடர்பில் இருந்தோரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. அரியாலை, முள்ளிப் பகுதி மற்றும் அண்டிய இடங்களில் உள்ள சுமார் 20 குடும்பங்கள் நேற்றிரவு தனிமைப்படுத்தப்பட்டன. மகன் சென்ற இடங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். அதேவேளை, பஸ் நடத்துநரான முதல் தொற்றாளர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியை விட்டு வெளியிடங்களுக்குச் செல்லவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவருக்குக் கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவரவில்லை. பஸ் சாரதி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. |