ரொறன்ரோ தமிழ் இருக்கைச் செயற்றிட்டத்தைச் செயற்படுத்துவதற்கான $3,000,000 என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் என்ற செய்தியைத் தெரியப்படுத்துவதில் கனடியத் தமிழர் பேரவை பெருமகிழ்ச்சியடைகின்றது.
மேத் திங்கள் 2018, கனடாவில் முதலாவது தமிழ் இருக்கையை நிறுவுவதற்காக, கனடியத் தமிழர் பேரவையும், தமிழ் இருக்கை அமைப்பும் இணைந்து, ரொறன்ரோ பல்கலைக்கழகத்தோடு ஓர் உடன்படிக்கையை மேற்கொண்டது. கோவிட்-19 என்ற உலகளாவிய பெருந்தொற்றால் துவண்டுவிடாது, தமிழ் சமூகமும், ஆர்வலர்களும் இணைந்து கனடிய மண்ணிலே வரலாற்று அருஞ்செயலை ஆற்றியுள்ளார்கள்.
கனடியத் தமிழர் பேரவை, அனைத்து கொடையாளருக்கும், சமூக அமைப்புகளுக்கும், ஊர்ச்சங்கங்களுக்கும், பழைய மாணவர் சங்கங்களுக்கும், கலைஞர்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாடுகளிலிருந்தும் ஆதரவு வழங்கிய நல்உள்ளங்களுக்கும் உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. குறிப்பாக, இச்செயற்றிட்டத்தை நிறைவேற்ற உதவிய தமிழ்நாட்டு அரசின் ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றது.
இந்த வரலாற்றுச் செயற்றிட்டமானது ஈழத்தமிழரின் தலைவராக விளங்கிய தந்தை செல்வா என்று அழைக்கப்படும் சா. ஜே. வே செல்வநாயகம் அவர்களின் 44ஆவது நினைவுநாளில் எட்டப்பட்டுள்ளது என்பதும் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை பெருந்தன்மையுடன் வழங்கிய நிதிக்கொடையால் எட்டியுள்ளோம் என்பதும் கூடுதல் சிறப்பு.
சிவன் இளங்கோ
தலைவர், கனடியத் தமிழர் பேரவை