கொழும்பு பொலிஸ் ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு செய்தி தலைப்பின் அடிப்படையில் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனிடம் விசாரணை நடாத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது, கடந்த மாதம் என்னை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். இதன் பொது நான் வெளியில் வந்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவித்திருந்தேன். அப்போது இலங்கை அரசாங்கம் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் பிரயோகிக்கும் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊடக அமைச்சர்கள் இது குறித்து கவனத்தில் எடுக்கவேண்டும். என்னைத் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்துவதால் நான் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் கூறியிருந்தேன். குறித்த எனது கருத்தின் அடிப்படையில் இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிலோன் நியூஸ் நிறுவனம் செய்தி பிரசுரித்திருந்தது அந்த செய்தியின் அடிப்படையில் இன்று என்னிடம் சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தனர் என்று தெரிவித்துள்ளார். |