சிம்பாப்வே அணி இருபதுக்கு 20 உலககிண்ண வரலாற்றில் இரண்டாவது சுற்றில் முதல்தடவையாக நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிம்பாப்வே அடுத்த சுற்றில் இந்தியா பாக்கிஸ்தான் தென்னாபிரிக்கா பங்களாதேஸ் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கின்றது.
ஏ குழுவிலிருந்து இலங்கை, நெதர்லாந்து ஆகியனவும் பி குழுவிலிருந்;து அயர்லாந்தும் ஏற்கனவே சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தன.
ஸ்கொட்லாந்துக்கு எதிரான கடைசி முதல் சுற்று ஆட்டத்தில் அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின், சிக்கந்தர் ராஸா ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் சிம்பாப்வே வெற்றியீட்டியது.
அப் போட்டியில் ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 133 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 18.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின், சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி தமது அணியின் வெற்றியையும் சுப்பர் 12 சுற்றுக்கான தகுதியையும் உறுதிசெய்தனர்.
ஸிம்பாப்வே அதன் முன்வரிசை வீரர்களான ரெஜிஸ் சக்கப்வா (4), வெஸ்லி மெதேவியர் (0) ஆகிய இருவரையும் 2 ஓவர்களுக்குள் மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு (7 - 2 விக்.) இழந்ததால் ஸ்கொட்லாந்து மகிழ்ச்சியில் திளைத்தது.
அதனைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 42 ஓட்டங்களாக இருந்தபோது சிரேஷ்ட வீரர் சோன் வில்லியம்ஸ் (7) ஆட்டமிழந்தார்.
ஆனால், க்ரெய்க் ஏர்வின் நிதானத்துடனும் சிக்கந்தர் ராஸா அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணி எதிர்கொண்ட அழுத்தத்தைக் குறைத்தனர்.
சிக்கந்தர் ராஸா 23 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் அடங்கலாக 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். (106 - 4 விக்.)
தொடர்ந்து க்ரெய்க் ஏர்வின் 6 பவுண்டறிகளுடன் 58 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார்.
மில்டன் ஷும்பா (11 ஆ.இ.), ரெயான் பூரி (6 ஆ.இ.) ஆகிய இருவரும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஸிம்பாப்வேயின் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 13 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஜொஷ் டாவி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர் மைக்கல் ஜோன்ஸ் (1), மெத்யூ க்ரொஸ் (1) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.
ஜோர்ஜ் முன்சே, ரிச்சி பெறிங்டன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 64 ஓட்டங்களாக உயர்த்தியபோது பெறிங்டன் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து கெலம் மெக்லியோடுடன் 34 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜோர்ஜ் முன்சே தவறான அடி தெரிவினால் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மெக்லியோட் 25 ஓட்டங்களையும் மைக்கல் லீஸ்க் 12 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் டெண்டாய் சட்டாரா 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிச்சர்ட் எங்கரவா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டி முடிவை அடுத்து சுப்பர் 12 சுற்றில் குழு 1இல் அயர்லாந்தும் குழு 2 இல் ஸிம்பாப்வேயும் இணைந்துகொண்டுள்ளன.
சுப்பர் 12 சுற்று அணிகள் வருமாறு
குழு 1: ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கை, அயர்லாந்து
குழு 2: பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, நெதர்லாந்து, ஸிம்பாப்வே