அனைத்து தரப்பினரும் பெருந்திரளாக இணைந்து தமது ஆதரவினை வெளிப்படுத்தும் விதமாக இன்றைய இப்போராட்டத்தில் இணைந்துள்ளனர். இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது பொலிஸார் தடுப்பதற்கு முற்பட்டுள்ளனர். போராட்டம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் பல்கலைக்கழக வாயிலுக்கு முன்னால் குவிந்த காவல்துறை, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டங்கள் கூடுவதற்கும், வாகன ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கும் தடை உள்ளதாகவும், மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் காவல்துறையினரின் இவ்வாறான எச்சரிக்கைகளையும் மீறி பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களும், சமூக அமைப்புக்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் தமது உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பேரணியில், சிவகுரு ஆதின முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல நூற்றுக் கணக்காணோர் கலந்து கொண்டனர் |