நேற்று மாலை நல்லூர் சப்பறத் திருவிழா நிறைவடைந்த நிலையில் பக்தர்கள் வருகை தரவும் போவதற்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி பாதை முற்றாக மூடப்பட்ட நிலையில் மற்றைய சிவன்கோவில் பாதையிலும் மாநகர சபை தடுப்புக்கள் முற்றாக விலத்தப்படாத நிலையில் சனநெரிசல் அதிகரித்து பலர் மூச்சுத்திணறலால் அவதியுற்றதுடன் அம்புலன்ஸ் வண்டி வருவதிலும் நெருக்கடி ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திய விஷமிகள் அங்க சேஸ்டையில் ஈடுபட்டதுடன்,திருடர்கள் பெருமளவு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதுடன் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டார். குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் பெருமளவான நகைகளும் குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு உடனடியாக கோவில் அருகில் ஆலயத்தினரால் போடப்பட்ட வீதித்தடைகளை தளர்த்தி பக்தர்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். பருத்தித்துறை வீதியை மறித்து நல்லூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினால் இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்ட பாதையும் இதன்போது பக்தர்களால் உடைக்கப்பட்டது. சப்பறத் திருவிழாவிலேயே இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டால் தேர்த்திருவிழாவில் இந்நிலை மோசமாகும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்ததுடன் இது தொடர்பில் யாழ் மாநகர சபை காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். |