2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலத்தில் நடைபெற்றுள்ள ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக தமிழ்க் கட்சிகள் முறையே சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேனா, சஜித் பிரேமதாச ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்டிருந்தன. இதில் இரண்டு வேட்பாளர்கள் வெற்றியடைந்திருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேன மட்டுமே வெற்றிபெற்றிருந்தார். ஆனால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறாக தொடர்ச்சியாக தென்னிலங்கை தலைவர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதும், பின்னர் அவர்கள் ஏமாற்றுவதுமான நிலைமைகள் வரலாறு நெடுகிலும் தொடர்கதையாக உள்ளது. தற்போதைய சூழலில் நாடு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்ற போதிலும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை நீண்டு கொண்டுடிருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரங்களைப் பகிரப்போவதாகவும், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்கப் போவதாகவும் அறிவித்து சில கலந்துரையாடல்களைச் செய்திருந்தார். இருப்பினும் அந்தக் கலந்துரையாடல்கள் திருப்திகரமானதாக இருக்கவில்லை என்பதோடு தேரர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட நிலைக்குச் சென்றிருக்கின்றது. ஆகவே, அடுத்த ஆண்டு நவம்பர் மாதமளவில் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளன. அந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸா நாயக்க உள்ளிட்டவர்களும் இன்னும் சிலரும் களமிறங்கவுள்ளதாக தற்போதைக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி நபர்கள் யாரும் தமிழர்களின் விடயத்தில் பகிரங்கமான உடன்பாடுகளை எட்டுவதற்கு தயராகவில்லை. ஆகக்குறைந்தது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினைக் கூட முழுமையாக அமுலாக்குவதற்கு தயார் என்ற அறிவிப்பைச்செய்வதற்கு தயாரில்லாதவர்களாக உள்ளனர். ஆகவே தான், தமிழ் கட்சிகளுக்கு இடையில் உடன்பாடுகளை எட்டு, தமிழ் மக்களின் வாக்குகள் அனைத்தும் எம்மால் நிறுத்தப்படும் பொதுவேட்பாளர் ஒருவருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பிரசாரத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த முயற்சியால் எம்மால் நிறுத்தப்படும் வேட்பாளர் ஜனாதிபதி அரசியாசனத்தில் அமரப்போகின்றார் என்பது அர்த்தமல்ல. மாறாக, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளமையால் அவர்கள் தென்னிலங்கை தலைவர்களை நம்பி வாக்களிப்பதற்கு தயார் இல்லை என்ற செய்தியினை வெளிப்படுத்துவதே இலக்காக உள்ளது. மேலும், தென்னிலங்கையில் தற்போதுள்ள கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம், ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கினால் எந்தவொருவரும் முதலாம் இரண்டாம் சுற்றில் கூட 51சதவீதமானத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் நிலையை அடைவதற்கான சாத்தியங்களும் உள்ளன. ஆகவே தான் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் கட்சிகள் இணைந்து நிறுத்துவதென தீர்மானித்துள்ளோம். இதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் இடையே கொள்கையளவிலான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதேநேரம், இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றுடன் உத்தியோக பூர்வமான பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன என்றார். |