கண்டி பிரதேசத்தில் மதுபான விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் சாமர சம்பத் அபேசேகர மற்றும் என். ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர். அதன் பிரதிவாதிகளாக முன்னாள் நிதி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி, நிதியமைச்சின் செயலாளர், அமைச்சர் வசந்த சமரசிங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் 39 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் ஊடாக, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26ஆம் திகதி முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற செப்டம்பர் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில், பிரதிவாதிகள் மதுவரிச் சட்டத்தின் விதிகளுக்கு மாறாக பல மதுபானசாலை உரிமங்களை வழங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கோரும் நோக்கில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலால் சட்ட விதிகளை தவிர்த்து தன்னிச்சையாகவும் அநீதியாகவும் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளதாகவும், அவை முறையான வெளிப்படைத்தன்மையின்றி வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண சட்ட நடைமுறையின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது வர்த்தகர் ஒருவரிடமிருந்து சுமார் 15 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வருமானமாகப் பெறுவதாகவும், ஆனால் இந்த சட்டவிரோத முறையின் மூலம் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதால் அரசாங்கத்திற்கு பாரிய வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகளின் இந்த நடவடிக்கையின் மூலம் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26 முதல் செப்டம்பர் 21 வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட மதுபானசாலை உரிமங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர். அத்துடன் குறித்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த மனு மூலம் கலால் திணைக்களத்தில் சட்ட விரோதமான முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறும் உயர் நீதிமன்றில் மனுதாரர்கள் கோரியுள்ளனர். |