பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அவர்கள் தம் மீது தாக்குதல் நடத்திவிட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் (12) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பளை - வண்ணான்கேணியைச் சேர்ந்த சிறீதரன் காந்தன் என்ற குடும்பஸ்தரே புலனாய்வாளர்கள் என்று கூறப்படுவோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ''பாதிக்கப்பட்ட நபரின் நண்பர் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த நிலையில் காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகின்றது. இந்தநிலையில், தலைமறைவானவர் தொடர்பில் தகவல் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டவரை புலனாய்வாளர்கள் அழைத்து சென்றதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நால்வரும் அவரைத் தாக்கி விட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். இந்தநிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் பளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. |