அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிரடியாக நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்ட காரணத்தால், செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பசும்பொன்னில் இணைந்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், சசிகலாவையும் சந்தித்து பேசிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“நாளை விரிவாக விளக்கமளிக்கிறேன்” - செங்கோட்டையன்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், நாளை விளக்கமளிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாளை 11 மணியளவில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மட்டுமின்றி அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசப்போவதாக, புதிய தலைமுறையிடம் அவர் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு கொண்டு வந்த காலை உணவுத் திட்டம், ஆந்திராவுக்கு சென்று தற்போது பிஹார் தேர்தல்களத்தில் வாக்குறுதியாக மாறியுள்ளது.
Twitter
ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில், நிதிஷ் குமார் அரசு மீண்டும் அமைந்தால் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 1 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜகூ தேர்தல் அறிக்கை: பிரசாந்த் கிஷோர் விமர்சனம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் வாக்குறுதி அறிக்கையை அல்ல, செயல்பாடு குறித்த அறிக்கையையே வெளியிட வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். பிஹார் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.