ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் நாளை மறுநாள் உரையாற்றும் போதும், ஐ.நா. பொதுச்செயலர் மற்றும் ஐ.நா.
மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரைச் சந்தித்துப் பேசும் போதும், இலங்கைப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்கும் யோசனையை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறி வருகிறார்.
மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரைச் சந்தித்துப் பேசும் போதும், இலங்கைப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்கும் யோசனையை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறி வருகிறார்.
எனினும் முன்வைக்கப்போகும் யோசனை என்ன என்பதை அவர் இன்னமும் வெளியிடவில்லை. அதேவேளை, அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தகைய எந்த யோசனையும் முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இராணுவத்தினர் மீது சுமத்தப்படுகின்ற போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஜனாதிபதி என்ன செய்யப் போகிறார் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
இந்த விடயத்தில் அவர் மூன்று விதமான வழிகளைப் பின்பற்றலாம்.
முதலாவது- போர்க்குற்றச்சாட்டுகளை மறுக்கலாம்.
இரண்டாவது,- அவற்றை நியாயப்படுத்தலாம்.
மூன்றாவது- போர்க்குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டு, அதிலிருந்து விடுவிப்பதற்கான வழிகளை முன்வைக்கலாம்.
போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை என்று மறுக்கும் வேலையை ஜனாதிபதி ஐ.நாவில் போய் முன்வைக்க வேண்டியதில்லை. ஏனென்றால், போர்க்குற்றங்கள் சுமத்த ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே, இலங்கை அரசாங்கம் அதனைத் தான் செய்து வருகிறது.
சர்வதேச அரங்குகளில் மஹிந்த ராஜபக் ஷ ஏராளமான சந்தர்ப்பங்களில் போர்க்குற்றங்களை நிராகரித்திருக்கிறார்.
எனவே, மைத்திரிபால சிறிசேன ஐ.நாவில் போய் இதனைச் செய்ய வேண்டும் என்பதில்லை. அவர் இதனைச் செய்யப்போவது இது தான் முதல் முறையுமில்லை.
அத்துடன், போர்க்குற்றச்சாட்டுகளை ஐ.நாவில் மறுப்பதால், விளைவுகள் ஏதும் ஏற்படப் போவதும் இல்லை. எனவே இதனை ஒதுக்கி விடலாம்.
இரண்டாவதாக, போர்க்குற்றங்களை நியாயப்படுத்துவது போரின் போது மீறல்கள் நடந்தன என்பதை ஏற்றுக்கொள்வது, ஆனால், அது அந்தச் சூழ்நிலையில் தவிர்க்க முடியாதது என்று நியாயப்படுத்தும் வழிமுறை இது.
புலிகள் பொதுமக்களை கேடயமாகப் பாவித்தனர், அதனால் வேறு வழியில்லை, மூன்று இலட்சம் பேரை மீட்பதற்கு சில ஆயிரம் பேரை பலி கொடுத்ததில் தவறில்லை. பயங்கரவாத எதிர்ப்புப் போரை நடத்திய ஒரு அரசாங்கத்துக்கு வேறு தெரிவு இருக்கவில்லை, பல ஆயிரம் படையினரில் சிலர் தவறுகளைச் செய்திருக்கலாம், ஒட்டுமொத்த இராணுவமும் போர்க்குற்றம் புரியவில்லை, இப்படியான வாதங்களை முன்வைத்து, மீறல்களை நியாயப்படுத்தக் கூடும்.
இவ்வாறான நியாயப்படுத்தல்கள் சில ஏற்கனவே அரச தரப்பிலுள்ளவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது தான்.
ஆனாலும், இவ்வாறான நியாயப்படுத்தல் எதுவும் ஜனாதிபதியினால் அதிகாரபூர்வமாக முன்வைக்கப்பட்டதில்லை.
எனினும், இவ்வாறு நியாயப்படுத்தும் போது சில விடயங்களை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டாலும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் என்றில்லை.
அவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே சர்வதேசம் வலியுறுத்தும்.
மூன்றாவதாக, படையினர் மீதுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வது. அதாவது, ஒட்டுமொத்த இராணுவமும் குற்றமிழைக்கவில்லை. சிலரே இதில் ஈடுபட்டனர். அவ்வாறானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, இந்தக் குற்றச்சாட்டில் இருந்து இராணுவத்தை விடுவிக்கும் வழியைத் தேடிக் கொள்வது.
இந்த வழிமுறையிலும் கூட பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் போர்க்குற்றங்களை அடையாளப்படுத்த வேண்டும். அதில் தொடர்புடையவர்களை இனங்காண வேண்டும். அதற்குப் பின்னர் தான், எஞ்சியவர்களை அதிலிருந்து விடுவிக்க முடியும்.
இந்த நிலையில் தான், போர்க்குற்றச்சாட்டில் இருந்து இராணுவத்தை விடுவிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால முன்வைக்கப் போகும், திட்டம் என்ன என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்படுகிறது.
ஏனென்றால் அவர் இதனை சாதாரணமாக முன்வைத்து விடமுடியாது. அவர் இந்தத் திட்டத்தை முன்வைத்திருக்கிறார் என்பதால், தமது பொறுப்புக்கூறலுக்கான எல்லா முயற்சிகளையும் சர்வதேசம் கைவிட்டு விடப் போவதுமில்லை.
இந்தக் கட்டத்தில் தான், அமைச்சர் சம்பிக்க ரணவக்க சில யோசனைகளை முன்வைத்திருந்தார்.
அதில் முக்கியமானது, விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினர் மீதுள்ள போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது.
இரண்டு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளித்து இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவது தான் அவரது திட்டம்.
விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டில், அல்லது விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில், 107 அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தண்டனை பெற்றுள்ளனர். சிலர் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளனர்.
நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கும் நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, போர்க்குற்றம் இழைத்த இராணுவத்தினரை விடுவிக்கும் யோசனையை முன்வைத்திருக்கிறார் சம்பிக்க ரணவக்க.
இராணுவம் போர்க்குற்றமே செய்யவில்லை என்று சாதித்து வந்தவர்களில் அமைச்சர் சம்பிக்க முக்கியமானவர். அப்படியிருக்க அவரே இன்று போர்க்குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்க யோசனையை முன்வைக்கிறார் என்றால், இந்தப் பிரச்சினை அரசாங்கத்துக்கு ஒரு தலைவலியாகவே இருக்கிறது என்று தான் அர்த்தம்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருக்கும் இந்த திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாகவே நிராகரித்திருக்கிறது. இரா.சம்பந்தனும் இதனை எதிர்த்திருக்கிறார். சுமந்திரனும் நிராகரித்திருக்கிறார்.
தமிழ் அரசியல் கைதிகள், 9 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்கள். அவர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாவற்றிலும், குற்றத்தை நிரூபிப்பதற்காக சான்றுகள் அரசாங்கத்திடம் இல்லை. பலாத்காரமாக பெறப்பட்ட- சட்டத்தின் முன் வலுவற்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து இந்த வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன.
அவ்வாறான அரசியல் கைதிகளையும், போர்க்குற்றம் இழைத்தார்கள் என்று குற்றம்சாட்டப்படும் இராணுவத்தினரையும் ஒரே நிலையில் எடை போட முடியாது என்பது சுமந்திரனின் வாதம்.
மன்னார் - அடம்பனில், 1986ஆம் ஆண்டு நடந்த ஒரு சண்டையில், விடுதலைப் புலிகளால் இரண்டு இராணுவத்தினர் சிறைபிடிக்கப்பட்டனர். அப்போது இராணுவத்தினரின் பிடியில் இருந்த அருணா, காமினி என இரண்டு விடுதலைப் புலிகளை விடுவித்து, அந்தஇரண்டு இராணுவத்தினரையும் மீட்டுக் கொண்டது அரசாங்கம்.
இதுபோன்ற ஒரு சில போர்க்கைதிகள் பரிமாற்ற சம்பவங்கள் போர்க் காலகட்டங்களில் நடந்துள்ளன. பின்னர், புலிகளிடம் சிக்கும் படையினரின் எண்ணிக்கை அதிகரித்த போது, அரசாங்கம் போர்க் கைதிகள் பரிமாற்றத்துக்கு இணங்கவேயில்லை. இதனால் புலிகள் வேறு வழியின்றி கட்டம்கட்டமாக அவர்களை விடுவிக்கும் நிலை தான் ஏற்பட்டது.
புலிகளின் காலத்தில் போர்க்கைதிகளைப் பரிமாறிக் கொண்டதைப் போல, இரண்டு தரப்புகளுக்கும் பொதுமன்னிப்பை அளித்து, இனிமேல் போர்க்குற்ற விவகாரங்கள் என்று எதுவும் எழாத வகையில் நிலைமையைச் சமாளிப்பதற்கு, அரசாங்கத்துக்குள் உள்ள சிலர் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
சில வேளை ஜனாதிபதியின் திட்டமும் இதனை ஒத்ததாக கூட இருக்கலாம். சம்பிக்க ரணவக்கவின் திட்டத்துக்கு எப்படி எதிர்வினைகள் வருகின்றன என்பதை பொறுத்து அவர் தனது திட்டத்தை முன்வைக்க எண்ணியிருக்கலாம்.
எது எவ்வாறாயினும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதன் மூலம், இராணுவத் தரப்பில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை, மறக்கச் செய்து, சமப்படுத்தி விடும் முயற்சிக்கு தமிழர் தரப்பு இணங்குவதற்குச் சாத்தியங்கள் இல்லை.
ஏனென்றால், இராணுவத் தரப்பின் மீது ஏராளமான போர்க்குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவையெல்லாம் குற்றச்சாட்டு நிலையில் தான் இருக்கின்றன என்ற போதும் அதனை ஒப்புக் கொள்ளும் நிலை கூட இன்னமும் உருவாகவில்லை.
முதலில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப் பின்னர், போர்க்குற்றங்கள் எவை என்று அடையாளம் காண வேண்டும். அவ்வாறான போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பது இனங்காணப்பட வேண்டும்.
அதற்குப் பின்னர் தான் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவது பற்றித் தீர்மானிக்க முடியும்.
யார் என்ன குற்றமிழைத்தனர் என்பதை அடையாளம் காணாமல், பொதுப்படையாக பொதுமன்னிப்பு அளிப்பது என்பது, நீதியை எதிர்பார்த்து நிற்கும் மக்களுக்கு செய்யப்படும் துரோகமாக இருக்கும்.
இங்கு நீதியை எதிர்பார்த்து நிற்பது, தனியே தமிழ் அரசியல் கைதிகளும், போர்க்குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினரும் தான் என்றால், இரண்டு தரப்புகளுக்கும் பொதுமன்னிப்பு அளித்து சமப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெருமளவு தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான நீதியை அளிக்க வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் பலரும் இன்று கேட்பது தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தான். அதற்கு அப்பாலேயே, தமக்கு ஏற்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.
அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது உண்மையை. என்ன நடந்தது- யாரால் நடந்தது - என்ற உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் போது, அவர்களே குற்றமிழைத்தவர்களை மன்னிப்பதா - இல்லையா என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள்.
ஏன் இது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொருத்தமானதாக இருக்காதா? நிச்சயம் என்றால் அவர்களுக்கும் பொருந்தக் கூடியது தான். ஆனால், அவர்கள் செய்தார்கள் என்று கூறப்படும் குற்றத்துக்காக நீண்டகாலம் சிறைத் தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள்.
போர்க்குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அப்படியில்லை. அவர்கள் இன்னமும் இனம்காணப்படவேயில்லை. அப்படி முகம் தெரியாத போர்க்குற்ற சந்தேக நபர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவது நீதியல்ல.
தென்னாபிரிக்காவில் கூட குற்றமிழைத்தவர்கள் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தாம் செய்த தவறுகளை – தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டார்கள். எல்லோரும் எல்லாக் குற்றங்களையும் ஒப்புக் கொள்ளாவிடினும், கணிசமானவர்கள் தமது குற்றங்களை ஏற்றுக் கொண்டார்கள்.
அதனால், பாதிக்கப்பட்ட மக்களால், அவர்களின் தவறுகளை மன்னிக்கும் மனப்பக்குவம் ஏற்பட்டது. மன்னிப்பு அளிப்பது குற்றமிழைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தண்டனையும் கூட. அந்த மன்னிப்பினால் வாழ்நாள் முழுவதும், குற்றமிழைத்தவர்களால் குற்ற உணர்வில் இருந்து விடுபட முடியாது.
ஆனால் இத்தகைய எந்த பொறிமுறைகளுக்கும் உட்படாமல், போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து வெளியே வருவதற்கே அரசாங்கம் எத்தனிக்கிறது.
உண்மையை வெளிப்படுத்த தயாரில்லாத தரப்புகள் தான், அரசியல் கைதிகள் விவகாரத்துடன் போர்க்குற்றங்களைச் சமப்படுத்தி, இந்தப் பிரச்சினையை தீர்க்க முனைகின்றன.
அரசாங்கத்துக்கு படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தலைவலியாக இருக்கின்றன.
நம்பகமான- நியாயமான விசாரணைகளுக்கு முன்வந்து, உண்மைகளைக் கண்டறியும் போது, போர்க்குற்றங்கள் தொடர்பான அழுத்தங்கள் அழுத்தங்களில் இருந்து விடுபடக் கூடிய வழி இருந்தாலும், அதனை விடுத்து, அரசாங்கம் குறுக்கு வழியிலேயே காரியம் சாதிக்க முனைகிறது.
இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் துரோகம் மாத்திரமன்றி, ஐ.நா. போன்ற சர்வதேச சமூகத்தினால் கூட ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் வாய்ப்புகள் இல்லை