அதிகார வர்க்கத்தால் நிகழும் கோர விபத்துகள் : திருமாவளவன் கண்டனம்
சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,
’’விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே முதலிப்பட்டி என்னுமிடத்தில் இன்று (5-9-2012) நண்பகல் வேளையில் நடைபெற்ற திடீர் விபத்தில் ஏறத்தாழ 60 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறான தீ விபத்துகள் அவ்வப்போது அதிர்ச்சியூட்டும் வகையில் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஏழை எளிய உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் தொடர்ந்து இத்தகைய விபத்துகளால் பலியாகி வரும் நிலை நீடிக்கிறது.
இவற்றை முறைப்படுத்தவும் உழைக்கும் மக்களுக்குரிய பாதுகாப்பினை வழங்கவும் விதிமுறை களை மீறும் தொழிலதிபர்கள், உடைந தையாய் இருக்கும் அரசு அதிகாரிகள் ஆகியோரைக் கண்காணிக் கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அரசு அக்கறை செலுத்துவதில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
இறந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமே அரசின் கடமை என்னும் நிலைமை தொடர்கிறது. சிவகாசியில் தொடரும் வெடி விபத்துகளை இனிமேலாவது தவிர்ப்பதற்கு, தடுப்பதற்கு அரசு தீவிர ஆய்வுகளையும் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.
தற்போது உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூபாய் 10 இலட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமெனவும் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதுடன் ரூபாய் 2 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் இதில் நிலையான ஊனமடைவோருக்கு அரசு வேலைவாய்ப்பும் இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.