தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்களுக்கு இலங்கை ஒப்புதல் : ஜெனீவா கூட்டத்தில் சமரசிங்கே
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அப்போது நடந்த படுகொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி இலங்கை அதிபர் ராஜபக்சே விசாரணை நடத்த தவறியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்நிலையில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஜெனீவாவில் இன்று மனித உரிமைக் குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை வெளியுறவுத் துறை மந்திரி சமரசிங்கே பேசியபோது,
’’உள்நாட்டுப் போர் காரணமாக 30 ஆண்டுகளாக இலங்கை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. போருக்குப்பின் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
மேலும் பெண்களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும். தமிழர் பகுதிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு மொழிப்பயிற்சி அளிக்கப்படும். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
போரின்போது காணாமல் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கியிருக்கலாம். எனவே, அவர்கள் பற்றிய தகவல்களை அந்தந்த நாடுகள் அளிக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணை செய்யப்படும். சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மீதான தாக்குதலில் இலங்கை அரசுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை’’என்று கூறினார்.