கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்த ஆயுத களஞ்சியத்தை
அகற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் காலத்தில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுத களஞ்சியம் ஒன்றை வைத்திருக்க, ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த ஆயுத களஞ்சியம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்பதனைக் கருத்தில் கொண்டு அதனை அகற்றுமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த ஆயுத களஞ்சியத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தானியங்கி துப்பாக்கிகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இந்த ஆயுத களஞ்சியம் தொடர்பான தகவல் நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மகிந்த ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த சில நாட்களின் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கைது செய்யப்படவிருப்பதாகவும் பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.