முறைப்பாட்டினை ஏற்கமறுத்தனர் பொலிஸார் ; வித்தியாவின் சகோதரன் மன்றில் சாட்சியம்
எமது வற்புறுத்தலின் பின்னரே ஊர்காவற்றுறை பொலிஸார் முறைப்பாட்டைப்பதிவு செய்து கொண்டனர் என வித்தியாவின் சகோதரன் மன்றில் சாட்சியமளித்துள்ளார்.
வித்தியாவின் மரண விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் .நடைபெற்றது. அதன்போது வித்தியாவின் சகோதரன் நிசாந்தன் உட்பட 7 பேர் சாட்சியமளித்தனர்.
அதன்போதே அவர் மன்றில் மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டினை முன்வைத்தார். மேலும் தெரிவித்ததாவது,
எனது தங்கை வித்தியா பாடசாலைக்கு 13ஆம் திகதி காலையில் சென்றவர் மாலை 3 மணியாகியும் வீட்டிற்கு வரவில்லை.
விசேட வகுப்பு ஏதாவது பாடசாலையில் போடப்பட்டுள்ளதா என்று பார்ப்பதற்கு சென்றேன் . பாடசாலை பூட்டப்பட்டு இருந்தது. மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சக மாணவி ஒருவரின் வீட்டுக்குப் போனேன்.
பாடசாலைக்கு வித்தியா இன்று வரவில்லை என தெரிவித்தார். பின்னர் தொலைபேசி மூலம் அதிபரிடமும் கேட்டேன் அவரும் அதே பதிலையே தெரிவித்தார்.
அதனையடுத்து நானும் எனது அம்மாவும் மாலை 5.30 மணியளவில் குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தோம். எனினும் தாம் முறைப்பாடு பதிவு செய்வதில்லை என்று கூறி எம்மை திருப்பி அனுப்பிவிட்டனர்.
அதன்பின்னர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் வந்தோம். மழை இருட்டாக இருந்ததால் நேரத்தை சரியாக கூற முடியவில்லை. இருப்பினும் இந்த நேரத்தில் தாம் முறைப்பாடு எடுப்பதில்லை காலையில் வருமாறு பொலிஸார் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது உங்கள் மகள் யாருடனும் சென்றிருப்பார் நாளை காலை வந்து விடுவார் என்றும் கூறினர். எனினும் எமது முறைப்பாட்டினை ஏற்றுக் கொள்ளுமாறு நாங்கள் வற்புறுத்தியதாலேயே முறைப்பாட்டைப் பதிவு செய்தனர் என்றார்