பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு: அடுத்த வாரம் இறுதி விசாரணை
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு தொடர்பாக ஜூலை 21, 22, 23 ஆகிய தேதிகளில் இறதி விசாரணை நடைபெறும். தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது. விரிவான விவாதங்களை வைக்க மத்திய அரசு அவகாசம் கோரியதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப் பட்டது. பின்னர், அவர்களின் கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில்கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
தமிழக அரசின் முடிவுக்கும், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால், குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க மத்திய அரசு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.
இதனால் ஏழு பேரை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்கள், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஸ், அபய் மனோகர் சப்ரே, உதய் உமேஷ் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது