திருமங்கலம் திமுக பொதுக் கூட்டத்தில் திமுக கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் பேசிய போது, ’’எந்த கட்சி தலைவராக இருந்தாலும் மைக்கை நீட்டி பேட்டி கேட்குறீங்க. கலைஞர் வெளியே வந்ததும் மைக்கை நீட்டி, குடும்ப பிரச்சனையா? கூட்டணியில் குழப்பமா? என்று கேட்குறீங்களே, தளபதியை ( மு.க.ஸ்டாலின்)எங்க பார்த்தாலும் எதாவது ஒரு சிக்கலில் மாட்டிவிடும் நோக்கத்தில் மைக்கை நீட்டி கேட்குறீங்ளே, முடிஞ்சா போயஸ்கார்டனில் போய் மைக்கை நீட்டு, டெய்லி அந்த அம்மா வரத்தான செய்யுறாங்க. காரித்துப்பத்தான் செய்வாங்க. அதான் விஜயகாந்த் காரித்துப்பினார். நம்ம எல்லாம் துப்பணும்னு நினைச்சோம். ஒரு ஆளு அத பண்ணிட்டார். பாராட்ட வேண்டிய விசயம். இதுக்கு மேல தமிழக மக்கள் இதே ஆட்சியை கொண்டு வந்தா தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொள்வதற்கு சமம்’’ என்று ஆவேசமாக கூறினார்.
இது பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டக்குரலும் எழுந்தது.
இந்நிலையில் மனுஷ்யபுத்திரன் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர், ‘’ பத்திரிகையாளர்கள் மேல் விஜயகாந்த் முன்வைத்த விமர்சனம் குறித்து நான் பேசியதை கண்டித்து பத்திரிகையாளர்கள் அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நான் ஊடகங்களின் பாரபட்சமான அணுகுமுறையை சுட்டிக்காட்டுவதுதான் என் நோக்கமே தவிர எந்தவகையிலும் ஊடகங்களை அவமதிப்பது என் நோக்கமல்ல. மேலும் கருத்து சுதந்திரத்திற்காகவும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து வாதாடியும் போராடியும் வருபவன் என்ற முறையிலும் நானே ஒரு ஊடகவியலாளன் என்ற முறையிலும் ஒரு போதும் ஊடகங்களை அவமதிக்க விரும்பமாட்டேன். என் கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.