தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த இதழை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைகளுக்குப் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடைகளுக்கு விநியோகிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வார இதழ் ஒன்றைக் கொண்டுசென்ற சமயம் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். ஒட்டுசுட்டான் -நெடுங்கேணி வீதியில் வீதிச்சோதனை சாவடியில் நின்ற படையினரால் குறித்த நபர் கொண்டு சென்ற பத்திரிகைகள் சோதனையிடப்பட்டன. இதன் பின்னர், அவரைக் கைது செய்து, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அவரை விசாரித்த பொலிஸார் பின்னர் விடுதலை செய்துள்ளனர் .
போதைபொருள் கடத்தலில் விடுதலை புலிகளிள் ஈடுபட்டார்கள் என ஜனாதிபதி கடந்தவாரம் தெரிவித்த கருத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உட்பட மறுப்பு தெரிவித்து விடுதலை புலிகள் அமைப்பு அவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை என கருத்து வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பான பத்தி வாரஇதழின் முதல் பக்கத்தில் "காலத்தால் உணர்த்தப்படும் வாக்கு மூலங்கள் " என தலைப்பிட்டப்பட்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.