இலங்கை இராணுவ தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பாக, ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புதிய இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும்.
குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமாக காணப்படும் இந்த தருணத்தில் இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்குமான அதன் உறுதிப்பாட்டினையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது" என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.