தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக 7 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறவில்லை.
இதனைத்தொடர்ந்து மகேந்திரன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி சத்தியநாராயணனும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதால் பயன் இல்லை என்று நீதிபதி ஹேமலதாவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 3வது நீதிபதியை நியமிக்கும் வகையில் ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டது