இது குறித்த தகவலை தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளதுடன், அவரது அரசியல் காய் நகர்த்தல்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த செய்திக் குறிப்பில்,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் இடத்திற்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், இதுவரை காலமும் ஜோதிடத்தில் நம்பிக்கை கொள்ளாத ரணில் அண்மையில் பிரபல ஜோதிடர் ஒருவரை சந்தித்து பதவிப்பிரமாணம் செய்ய சுபநாள் பார்த்த போது 8 அல்லது 22 என்ற திகதிகள் அவருக்கு சுபநாட்களாக குறித்து வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி இலக்கம் 8 மஹிந்த ராஜபக்ஷவின் ராசியான எண் என்பதால் பெரும்பாலும் ரணில் 22ஆம் திகதி தனது நாடாளுமன்ற பிரவேசத்தை மேற்கொள்ள வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
அத்துடன் நாடாளுமன்றம் வருவதற்கு ரணில் முடிவு செய்ய காரணம் வௌியில் இருந்து கொண்டு அவர் நகர்த்திய அரசியல் காய்களின் பிரதிபலன் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
குறிப்பாக தற்போதை எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் காணப்படும் சிறு சிறு பிளவுகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதன்மூலம் எதிர்கட்சித் தலைவர் பதவியை பிடிப்பது ரணில் விக்ரமசிங்கவின் புதிய அரசியல் கேம் என கூறப்படுகிறது.
இந்த புதிய அரசியல் கேம் பின்னணியில் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட பாட்டாளி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43ஆவது படையணியும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும், நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சஜித் மீது உள்ள கோபத்தை பாட்டலியும், டயானாவும் ரணிலுடன் கைகோர்த்து வஞ்சம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளதால் அரசியல் மாற்றம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஆளும் கட்சியில் மீண்டும் மஹிந்தவாத குடும்ப அரசியல் தலைதூக்கி இருப்பதால் அதில் அதிருப்தி கொண்டுள்ள சில ஆளும் தரப்பினரும் ரணிலுடன் கைகோர்த்து புதிய பாதையில் செல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.
மேலும் எதிர்க்கட்சித் தலைவரது சில செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தன்பக்கம் ஈர்த்து புதிய அரசியல் பயணமொன்றை மேற்கொள்ள ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதால் இலங்கை அரசியலில் எதிர்வரும் நாட்களில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றே கருதப்படுகிறது – என்றுள்ளது.