பதுளை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, கொழும்பு, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, குருணாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய 17 மாவட்டங்களிலும் 126 பிரதேச செயலகப் பிரிவுகள் காலநிலையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் இன்று புதன்கிழமை காலை 8 மணி வரை 20 பேர் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளதோடு , ஒருவர் காணாமல் போயுள்ளார். அத்தோடு ஐவர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு, வெள்ளம் என்பவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட 384 குடும்பங்களைச் சேர்ந்த 1,498 பேர் 23 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அனர்த்தம் ஏற்படக் கூடும் என்ற அபாயத்தினால் முன்னெச்சரிக்கையாக 1,020 குடும்பங்களைச் சேர்ந்த 3,537 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவை தவிர நாடளாவிய ரீதியில் ஒட்டுமொத்தமாக 17,481 குடும்பங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 வீடுகள் முழுமையாகவும் , 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. |